ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு- கருக்கா வினோத்தை ஏவியது யார்? ’கோஷமிடும் வீடியோ’ - NIA விசாரணை
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை தூண்டிவிட்டது தடை செய்யப்பட்ட அமைப்புதானா? என்கிற கோணத்தில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகாமை) விசாரணை நடத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்க தமிழ்நாட்டுக்கு வந்த நாள் முதலே பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் நாள்தோறும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறவர். ஆனாலும் சளைக்காமல் தொடர்ந்து 'இந்துத்துவா' கருத்துகளை தீவிரமாக முன்வைத்தும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை மறைமுகமாக சாடியும் வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள், இஸ்லாமிய கைதிகள் விடுதலை கோப்பு உள்ளிட்டவற்றை நிலுவையில் வைத்திருக்கிறார் ஆளுந ரவி என்பதும் விமர்சனம்.

பெட்ரோல் குண்டு வீச்சு: இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் மீது ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
என்.ஐ.ஏ. விசாரணை: இதனிடையே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்கிய கருக்கா வினோத் அண்மையில்தான் சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நபர்கள் யார்? அவரது பின்புலம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

கருக்கா வினோத் லிங்க் அதுதானா?: இந்த விசாரணையின் போது, சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் வீடியோ பதிவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் கைதிகள் சிலருடன் சேர்ந்து சிறையில் இருந்து கருக்கா வினோத் வெளியே வருவதும், அவர்களுடன் இணைந்து கருக்கா வினோத்தும் கோஷம் போடுவதுமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருக்கா வினோத்துடன் இணைந்து கோஷம் போடுகிறவர்கள், தமிழ்நாடு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாம். இதனால் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது அந்த இயக்கத்தினர்தானா? அந்த இயக்கத்தினர் தூண்டுதலில்தான் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சிகள் நடைபெற்றதா? என்ன காரணத்துக்காக இந்த பயங்கரவாத செயலில் கருக்கா வினோத் ஈடுபடுத்தப்பட்டார் என்கிற கோணங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications