"மொத்தம் 3 முறை.." கேரளாவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. என்ன நடந்தது? நேரில் பார்த்தவர் பகீர்
கொச்சி: கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை அங்கே என்ன நடந்தது என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கே மத வழிபாட்டு தளம் ஒன்றில் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

காலை 9.40 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு: களமச்சேரியில் உள்ள மத வழிபாட்டு அரங்கில் சுமார் 2,000 பேர் ஒன்று கூடிய நிலையில், இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்தோரில் சிலரது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஐஇடி காரணமாக இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே குண்டுவெடிப்பு நடந்த போது அங்கிருந்த ஒருவர் இது குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன நடந்தது: குண்டு வெடிப்பு நடந்த போது அங்கிருந்த நபர் இது குறித்துக் கூறுகையில், "பிரார்த்தனை கூடாரத்தின் மையப் பகுதியில் தான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மொத்தம் மூன்று முறை வெடிச்சத்தம் கேட்டது. மண்டபத்தின் நடுவில் திடீரென நிறையப் புகை எழுந்தது. இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கே பல பிரார்த்தனை கூடாரத்தில் பல இடங்களில் தீ பரவியுள்ளது. மேலும், புகைக்கு நடுவில் மக்கள் தடுமாறிக் கொண்டு வெளியே வரும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
என்ஏஐ அதிகாரிகள்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள அரசுக்கு உதவும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில், தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றின் குழுக்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன. மேலும், இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா, குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்..
இது தொடர்பாக மற்றொரு நபர் கூறுகையில், "ஆரம்பத்தில் இதை நாங்கள் ஒரு விபத்து என்றே நினைத்தோம். புகை கிளம்பியதும் உடனடியாக அனைவரும் வெளியே வந்துவிட்டோம். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். முடிந்தவரை அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வந்தோம். இப்போதைக்கு இங்கே இதுதான் நிலைமை உண்மையில் இங்கே என்ன நடந்தது என்பதை அதிகாரிகள் சொன்னால் தான் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
கேரளா போலீசார்: இந்த தாக்குதலுக்கு ஐஇடி என்ற வகைக் குண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.. முதற்கட்ட விசாரணையில் டிபன் பாக்ஸில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு நடந்தபோது அங்கே சுமார் 2,000 பேர் இருந்தாக கூறப்படுகிறது. முதல் குண்டுவெடிப்பு காலை 9.43 மணிக்கு ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications