மாதம் 1000 ரூபாய்.. தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் கோவை மாணவர்கள் ஹேப்பி.. எத்தனை பேருக்கு தெரியுமா?
கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 15,700 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழை மாணவர்கள் அதிகம் பலன் அடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழக அரசு புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது. அதேபோல, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை உருவாக்கி உள்ளது. உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை மேலும் அதிகரிக்க, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது..

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சிபெற்றவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு படிக்கும் பட்டப் படிப்புகள், 4 ஆண்டு பொறியியல் படிப்புகள், 5 ஆண்டு மருத்துவப் படிப்புகள், 3 அல்லது 4 ஆண்டுகள் படிக்கும் சட்டம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்புகள் படிக்கும் மாணவர்கள், 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடிகிறது.
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பலன் அடைந்து வருகின்றனர். தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம், கோவை அரசு கலைக்கல்லூரியில் வைத்து தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 15,700 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி கூறுகையில், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்பின்னர் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 15,700 மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழை மாணவர்கள் அதிக பலன் அடைந்து வருகிறார்கள்" இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications