4 தொகுதிகளில் 152 வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 68 வேட்பு மனுக்கள் ஏற்பு
கோவை: தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில மொத்தம் 152 வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர் அரவக்குறிச்சி, திருப்பரங்ககுன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்து முடிந்தவிட்ட நிலையில் இந்த 4 தொகுதிக்கும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்தன.

அதிமுக வேட்பாளர்கள்
இதன்படி திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அ.தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் கந்தசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, ஓட்டப்பிடாரத்தில் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர்கள்
தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அமமுக போட்டி
அமமுக சார்பில் சூலூர் தொகுதியில் கே.சுகுமார், அரவக்குறிச்சி தொகுதியில் பி.எச்.சாகுல் அமீது, திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஆர்.சுந்தரராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் மோகன்ராஜ் , சூலூர் தொகுதியில் மயில்சாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில், சக்திவேல் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வளரும் தமிழகம் சார்பாக காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

152 வேட்பு மனு ஏற்பு
இந்நிலையில் நேற்றுடன் (ஏப்ரல்29) வேட்பு மனு தாக்கல் 4 தொகுதிகளிலும் நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனுதாக்கல் பரிசீலனை நடந்தது. இதன்படி, சூலூர் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரத்தில் மொத்தம் 152 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் முனியாண்டி, சூலூரில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளர் மோகன் உள்பட அனைத்து முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்கள்
சூலூர் தொகுதியில் 22 வேட்பு மனுக்களும், அரவக்குறிச்சியில் 68 வேட்ப மனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 44 வேட்பு மனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 18 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. மே 2-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications