சுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி
Recommended Video
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நடூரில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரின் வீடும் காலியிடமும் உள்ளது.
சிவசுப்பிரமணியன் தனது காலியிடத்தை சுற்றி 22 அடி உயர தடுப்புச்சுவரை 80 அடி நீளத்திற்கு கருங்கல்லால் எழுப்பி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தடுப்புசுவர் அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, ஏபியம்மாள், குருசாமி உள்ளிட்டோரின் வீடுகள் இருந்தன.

மூன்று வீடுகள்
நேற்று அதிகாலை பெய்த கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து 3 வீடுகள் மீது விழுந்தது. அதிக எடையுள்ள கருங்கல் சுவர் விழுந்ததால் மண் மற்றும் ஓட்டு வீடுகளான இந்த மூன்று வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

அமைச்சர்களுடன் ஆய்வு
இந்த விபத்து தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் : மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்கள் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

வீடுகள் இடிந்தது
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்றைய தினம் சுமார் 18 செமீ மழை பெய்திருக்கின்றது. இந்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூரில் காலணியில் 3 வீடுகள் அருகாமையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது.

17 பேர் உயிரிழப்பு
அந்த மூன்று வீடுகளில் வசித்த 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தகவல் கிடைத்ததும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத்தோம். அந்த மதில் சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம்.

இரங்கல்
கனமழையின் காரணமாக மதில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அந்த 17 பேர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

நிவாரண நிதி
இந்த செய்தி அறிந்த உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்த 17 பேருக்கும் தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.6லட்சம் வழங்கப்படும். இதன் மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு வேலை
அதோடு வீடு இழந்தோருக்கு புதிதாய் வீடு கட்டித்தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

புதிய வீடுகள்
நானும் துணை முதல்வரும் ஆய்வு செய்த போது பல வீடுகள் இன்னும் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன. அரசின் சார்பாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications