கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 3563 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் மொத்தம் 14,252 பேர் பணியில் ஈடுபட வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை அதாவது அரசு ஊழியர்களை கோவை மாவட்டத்தில் இருந்து பிரதானமாகவும், மற்ற ஊர்களில் இருந்து கணிசமானோரையும் தேர்தல் பணிக்கு கொண்டு வர வேண்டியது கோவை மாவட்ட கலெக்டரின் பொறுப்பு.. ஆனால் கோவை கலெக்டரிடம் தேர்தல் பணியில் விலக்கு கேட்டு 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் விண்ணப்பத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீத ரிசர்வ் ஊழியர்களுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை அனுப்பப்பட்டது. கல்வி, வருவாய், பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உட்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் உடல் நலக்குறைவு மற்றும் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் பணியில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். மருத்துவ சான்றிதழ்களுடன் அரசு ஊழியர்கள் குவிந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் பணி என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியக் கடமை. ஆனால், 2,000 பேர் ஒரே நேரத்தில் 'உடல் நலக்குறைவு' என்று விலக்கு கேட்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது நிஜமான உடல்நலப் பிரச்சனையா என்றால் அதில் ஓரளவே உண்மை உள்ளது. ஏனினும் தேர்தல் பணியில் இருக்கும் கடுமையான வேலைப்பளு மற்றும் பொறுப்புகளுக்குப் பயந்து விலக நினைப்பதாக உண்மையில் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணங்களை பார்ப்போம்..
தேர்தல் பணி என்பது ஒரு சாதாரண அரசுப் பணியை விட பலமடங்கு மன அழுத்தமும் உடல் உழைப்பும் கொண்டது ஆகும். ஏனெனில் தேர்தல் நாளில் விடியற்காலை 5 மணிக்கே வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியது. வாக்குப்பதிவு முடிந்து, இயந்திரங்களைச் சீல் வைத்து, மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்க நள்ளிரவு 2 மணி அல்லது அதற்கு மேல் ஆகிவிடும். இது இடைவிடாத 20 மணிநேர வேலை ஆகும்.
அதேபோல் பல கிராமப்புற வாக்குச்சாவடிகளில் முறையான தங்கும் வசதி, கழிப்பறை வசதி அல்லது தரமான உணவு இருப்பதில்லை. குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ள ஊழியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்குள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தான் அவர்களை கவனிக்க வேண்டிய நிலை வருகிறது.
தூரமான இடங்களுக்குப் போடப்படும் பணி, சொந்த வாகனங்களில் செல்வதற்கான செலவு போன்றவை ஊழியர்களுக்குச் சுமையாக மாறுகிறது. அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு சிறு தவறு நடந்தாலும் அல்லது அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டாலும், அதற்குத் தேர்தல் அதிகாரிதான் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பயமும் பலரை பணி வேண்டாம் என்று ஓடவைப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications