கோவையில் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த 2 மாடி வீடு.. சில நிமிடங்களுக்கு முன்பு காட்டிய அறிகுறி
கோவை: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடை தடாகம் தொடங்கி சிங்காநல்லூர் குளம் வரை நீள்கிறது.இந்த கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த சூழலில் டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகர் பகுதியில் சங்கனூர் ஓடையோரம் இருந்த மாடி வீடு இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவைக்கு மிகவும் பிரதானமான ஓடை என்றால் அது சங்கனூர் ஓடை தான். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம் வழியாக சிங்காநல்லூர் குளத்தை அடைகிறது. அதன் பிறகு நொய்யல் ஆற்றில் கலக்கிறது. கடந்த காலத்தில் சிறப்பாக இருந்த சங்கனூர் ஓடை, தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது.. இதன் காரணமாக ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் இருக்கிறது.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சங்கனூர் ஓடை தூர்வாரப்படுவதுடன், இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகிறது.
அந்த வகையில், கோவை டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகர் பகுதியில் ஓடையை தூர்வாரும் பணி நடந்தது. அங்கு சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கொண்ட வீடு இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் பின் பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றிதர வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது. இதன்படியே வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டது. பின்புறம் வீட்டை அகற்றியதால் சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வேறு வீட்டிற்கு போய்விட்டார்.

இதனால் அந்த வீடு காலியாக இருந்தது. நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை ஓடையை ஒட்டி சுவர் அமைக்கும் பணி நடந்தது. பணியாளர்கள் சரியாக வெளியேறிய 10 நிமிடத்தில் 2 மாடி வீடு சரிந்து விழுந்தது. அதாவது நேற்று இரவு 9.15 மணியளவில் திடீரென அந்த 2 மாடி வீடு சீட்டுக் கட்டு போல் சரிந்து விழுந்தது. ஆனால் அதற்கு முன்னாக சரிந்து விழப்போகிறது என்கிற அறிகுறியை சில நிமிடங்களுக்கு முன்பு காட்டியிருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் உடனே வெளியேறிவிட்டனர். இந்த சம்பவத்தில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 வீடுகள் சேதமடைந்தன.

இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பே வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications