இதுதான் கர்மா.. பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலி! பொள்ளாச்சியில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் நேற்று காலை பெண் ஒருவர் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு வெங்கடரமணன் வீதியில் அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

உடனே அவர்கள் அந்த சாலையில் யாரும் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை மடக்கி அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அந்த பெண் சுதாரித்துக் கொண்டு தனது செயினை காப்பாற்ற போராடினார்.
இதையடுத்து கடைவீதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் திரண்டனர். இதை பார்த்த இரு கொள்ளையர்களும் நகைப்பறிப்பு முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பொள்ளாச்சி பஜாரில் ஆள் நடமாட்டம் உள்ள ஒரு சாலையில் இப்படி நடந்த நகை பறிப்பு சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அந்த பெண்ணை கீழே தள்ளி நகைப்பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர் முகக்கவசம் அணிந்திருந்தார். அது போல் மோட்டார் சைக்கிளில் பின்னாால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார். இந்த நிலையில் பொள்ளாச்சி மேம்பாலத்தில் ஒரு பைக் வேகமாக வந்தது. அப்போது அந்த பைக் தலைக்குப்புற கவிழ்ந்து சென்டர் மீடியனில் இடித்தது. இதில் இரு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
தகவலறிந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்தில் பலியானது தெரிய வந்தது. அவர்கள் தாராபுரத்தை சேரந்த சஞ்சய் குமார் (26) என்பது தெரியவந்தது. இன்னொருவர் யார் அவரது பெயர் என்ன, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக பொள்ளாச்சி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications