கொங்கு மண்டலத்தில் இருந்து கோட்டைக்கு ரூட் போடும் தவெக.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அப்டேட்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர், "கோவை மண்டலம் என்பது தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது. அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது" என்று கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும். இன்னும் 70 முதல் 75 நாட்களில் அது நடக்கும். தமிழக மக்கள் கடந்த காலங்களில் ஆண்ட இரண்டு பெரிய கட்சிகளையும் பார்த்துவிட்டார்கள். மக்கள் இப்போது ஒரு உன்னதமான, நேர்மையான, இளமைத் துடிப்புள்ள தலைவரைத் தேடுகிறார்கள். அது நம் தலைவர். கோவை மாவட்டத்தின் சிறுவாணி நீருக்கு ஒரு தனிச் சுவை உள்ளது.

கொங்கு தான் கோட்டையின் சாவி
அதேபோல், இந்த கோவை மண்ணின் அரசியலுக்கும் ஒரு தனித் தனித்துவமான சக்தியும் உண்டு. அந்தச் சக்தியை இன்னும் பலமாக்கி, தமிழகத்தின் அரசியலைச் சீரமைக்கத்தான் இன்று கோட்டையை நோக்கிப் புறப்பட்டிருக்கிறார் நம் தலைவர். அரசியல் என்பது பலருக்குப் பிழைப்பதற்கான தொழிலாக இருக்கலாம். ஆனால், நம் தலைவருக்கோ அது ஒரு மிகப் பெரிய சமூகப் பொறுப்பு.நம் தலைவர் வெறும் கையை வீசிக்கொண்டு வாக்குக் கேட்க வரவில்லை.
கடந்த 30, 32 ஆண்டுகளாகப் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்துவிட்டு, பல சமூக சேவைகளை ஆற்றிவிட்டுத்தான் இன்று மக்களிடம் நேரடியாக ஓட்டு கேட்க வருகிறார். கோவை மண்டலம் என்பது தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது. அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மக்கள் யார் யாரையோ முகவரியாகத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.
கூட்டணி குறித்து கவலை
எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, இனி தமிழகத்தின் ஒரே முகவரி தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான். பதவிக்காக யாரிடமும் அடிபணிந்து செல்பவர் அல்ல நம் தலைவர். அவர் மக்களுக்காகச் சிந்திப்பவர். பதவி அவரைத் தேடி வர வேண்டும் என்று நினைப்பவர். பல இடங்களில் நம் கொடிப் பறக்கும் போது மற்ற கட்சிக்காரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.
கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். 'அந்தக் கூட்டணியில் 10 பேர் இருக்கிறார்கள், இந்தக் கூட்டணியில் 15 பேர் இருக்கிறார்கள்' என்று பேசுவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நீங்கள் தனியாக, சிங்கிளாக, நம் தலைவரின் 'விசில்' சின்னத்தைப் பதித்த துண்டைப் போட்டுக்கொண்டு நின்றால், நீங்கள் 500 பேருக்குச் சமம். விசில் சின்னம் என்பது இன்று உலகம் முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு சின்னம்.
மக்கள் தயாராகிவிட்டார்கள்
2026-ல் கோயம்புத்தூரில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளும் தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறும். குறிப்பாகக் கொங்கு மண்டலம் முழுவதும் நமது வெற்றிக் கொடி பறக்கும். நாம் இதுவரை உழைத்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னும் மீதமிருக்கும் சில மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
நம் தலைவரை 2026 மே மாதம் முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்பதே நமது ஒரே லட்சியம். அதற்கு நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். மக்கள் நமக்கு ஓட்டுப் போடத் தயாராகிவிட்டார்கள். நாம் அவர்களைச் சரியாகச் சென்றடைந்தால் போதும்" என்றார்.












Click it and Unblock the Notifications