கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலியான சோகம்.. ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராட்சத விளம்பர பலகையில் விளம்பர பேனர் வைக்கும் போது இரும்பு தூண்கள் சரிந்து விழுந்தது. இதில் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 60 அடி உயரத்தில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த விளம்பர பலகையில் நேற்று விளம்பர பேனர் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து வந்தாக சொல்லப்படுகிறது. இந்த ராட்சத விளம்பர பலகையில், விளம்பரபேனரை பொருத்தும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நடைபெற்று கொண்டிந்த போது அங்கு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் இரும்பு தூண்கள் அசைந்துள்ளது. இதனால், பேனர் மட்டும் மாட்டிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். உடனடியாக இறங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகமும் தொழிலாளர்கள் ஒரே பக்கமாக இறங்கியதாலும் 60 அடி உயரத்தில் பிரம்மண்ட உயரத்தில் இருந்த அந்த இரும்பு தூண் சரிய தொடங்கியது.
தொடர்ந்து பாரம் தாங்காமல் இரும்பு தூண்கள் சாய்ந்து தரையில் விழுந்தன. அப்போது தொழிலாளர்களும் இதில் சிக்கிக் கொண்டனர். இரும்பு தூண்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது40), சேகர் ( வயது 45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (வயது 52) ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தை வந்து பார்வையிட்டனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேனர் பொருத்தும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் மீது கோவை கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் பாலாஜி, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் ஐபிசி 302 மற்றும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications