கோவையில் விளம்பர பேனர் சரிந்து 3 பேர் பலியான விவகாரம்.. ஒப்பந்ததாரர் அதிரடி கைது.. என்ன நடந்தது?
கோவை: கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த நிலையில் ஒப்பந்ததாரரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு பிரமாண்டமான பேனர் பொருத்தும் பணி இன்று நடந்தது.

இந்த பணியை சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிசாமி தலைமையில் தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்த விளம்பர பேனரை அகற்றிவிட்டு புதிய பேனர் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று பேனர் சரிந்து விழுந்தது. அப்போது பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பேனரின் அடியில் சிக்கினர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த குமார் (வயது 40), குணசேகரன்(52), சேகர்(45) ஆகியோர் உடல் நசுங்கி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் 2 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விபத்தின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது விளம்பர பேனர் பொருத்தியபோது பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. இந்த வேளையில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விளம்பர பேனர் பொருத்துவற்கான இரும்பு சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதையடுத்து சாரம் மற்றும் பேனருக்கு அடியில் சிக்கி 3 தொழிலாளர்கள் இறந்தது தெரியவந்தது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேனர் பொருத்தும் பணியை மேற்கொண்ட ஒப்பந்தாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாககருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications