மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்
வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தனிப்படைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் சிறுவனை மீட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவளத் தெருவில் வசித்து வருபவர் வேணு. சாப்ஃட்வேர் இன்ஜினியரான வேணு, தனது நான்கு வயது மகன் முகேஷை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது, வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு மர்ம நபர்கள் திடீரென மிளகாய்ப் பொடியைத் தூவி, வேணுவின் கண் முன்னேயே நான்கு வயது குழந்தையை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள்
அந்த மர்ம நபர்கள் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இதைக் கண்டு வேணு சப்தமிட்டு துரத்திச் சென்றபோதும் கார் நிற்காமல் அதிவேகமாக அங்கிருந்து சென்றுள்ளது. குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்துற்கு வேணு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் அனைத்து நிலையங்களுக்கும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தனர். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆறு தனிப்படைகள் அமைப்பு
குழந்தை கடத்தல் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த சிறுவன் மாதனூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே நின்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக தனிப்படை காவல் துறையினர் சிறுவனை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
சிறுவன் மீட்பு
குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார், எதற்காக குழந்தையைக் கடத்தினர் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. வீட்டில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கிட்டத்தட்ட அங்கிருந்து 10 முதல் 15 கிலோமீட்டருக்கு அப்பால் தனித்து விடப்பட்டுள்ளார். இந்தக் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு குழந்தையை 2 மணி நேரத்தில் கண்டுப்பிடித்துக் கொடுத்த தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications