எழுந்திரும்மா.. போகலாம்.. மின்வேலியில் சிக்கி இறந்த குட்டி.. கண்கலங்க வைத்த தாய் யானை
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலியானது. உயிரிழந்த யானையை தாய் யானை தும்பிக்கையால் எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.
வனக்காடுகள் மனிதனுக்கு சொந்தமல்ல.. விலங்குகளுக்கு சொந்தமானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் மனம் தான் உணர மறுக்கிறது. ஆறும் ,ஏரியும் என்றைக்கும் தன் வழித்தடத்தை மறப்பது இல்லை. எத்தனை அணை போட்டாலும் நிச்சயம் வரும்.
அதேபோல் யானையும் காலம் காலமாக மூதாதையர்களின் வழித்தடங்களை மறந்து ஒரு போதும் வேறுபாதையில் பயணிக்காது . ஏனெனில் அதன் பாதை அதற்கு தெரியும். ஞாபகம் வைத்து வந்துவிடும்.

மனித மோதல்
ஆனால் மனிதர்களோ, பேராசையில் காடுகளை வேட்டையாடி, பசுமை பாலைவனம் ஆக்கி தங்களுக்கு வேண்டியதை பயிரிட்டு அந்த நிலத்தை மாற்றுவதுடன், பாதையில் பயணிக்கும் வனவிலங்குகளை கொல்கிறார்கள். வனவிலங்குகளும் மனிதர்களை கொல்கின்றன. மற்ற விலங்குகளை விட யானை தான் மனிதனின் செயல்களுக்கு எதிர்வினையாற்றுகிறது. இதனால் யானை மனித மோதல் தொடர்கதையாக உள்ளது.

பாலக்காடு கணவாய்
சரி விஷயத்திற்கு வருவோம்.. கேரளா தமிழகம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உலா வருவது வழக்கம். குறிப்பாக தமிழக கேரள எல்லையை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் ஊர் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருகின்றன. கணவாயும், மலையும் சந்திக்கும் பகுதிகள் என்பதால் யானைகள் கிராஸ் ஆகும் இடமாக கோவை பாலக்காடு ரயில் வழித்தடம் உள்ளது. அங்கு ரயிலில் அடிபட்டு ஏராளமான யானைகள் இறந்துள்ளன.

யானை பலி
இதேபோல் அங்குள்ள, பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கியும் யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

மீட்கும் பணி
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தட்டு தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனையடுத்து சிறிது நேரம் ஆகிய பின்னர் யானை அங்கிருந்து செல்லவே வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு பணியை மேற்கொண்டனர். உயிரிழந்த குட்டி யானையை தாய் யானை எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications