பொள்ளாச்சியில்... ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா!
மதுரை : ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக கணவன் தன்னை மிரட்டுவதாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அஜித்குமார் இந்த பெண்ணை விரட்டிவிட்டு வேறு திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதற்காக மயக்க மருந்துகளை அந்த பெண்ணுக்கு கொடுத்து ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் இப்பெண் தரப்பில் கூறப்படுகிறது.
கொடுமை
இதையடுத்து மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அப்பெண் அங்கு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தமது நகைகளை பறித்துக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
சித்ரவதை
மேலும் கடந்த 2 மாதங்களாக வீட்டில் அடைத்துவைத்து தன்னை மது குடிக்க சொல்லி மயக்கத்தில் இருக்கும் போது என்ன நடந்தது என்றே தெரியாத அளவுக்கு அஜித்குமார் சித்ரவதை செய்வதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
தர்ணா
மேலும் ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
ஆபாச படம்
கணவரே மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக பெண் புகார் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.