செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே பைக் ஓட்டி.. இன்னொரு வாகன ஓட்டி எடுத்த வீடியோவால் சிக்கிய நபர்
கோவை: மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு இளைஞர் சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகளவிலான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்களால் விபத்துகள் நிறைய ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் செல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ 1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்க வேண்டாம் என போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரம்
இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இடது பக்க கண்ணாடி அருகே செல்போனை ஸ்டேன்டில் வைத்து கொண்டு அதில் சீரியலை பார்த்தபடியே வாகனத்தை ஓட்டி சென்றார்.

சமூகவலைதளங்கள்
இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்களில் வைரலானது. இதையடுத்து அந்த பைக் எண்ணை வைத்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

சூப்பர்வைசர்
அதில் அவர் கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முத்துசாமி (35) என்பதும் தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரத்யேக செல்போன் ஸ்டான்ட் அமைத்து அதில் செல்போனை வைத்து கொண்டு சீரியல் பார்த்தது தெரியவந்தது.

செல்போன்
இதையடுத்து அவர் மீது வாகனத்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துதல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரூ 1200 அபராதம் விதித்தனர். மேலும் அவரது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் ஸ்டேன்டும் அகற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications