கோவை - பொள்ளாச்சியை அதிரவைக்கும் தனியார் பேருந்துகள்.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
கோவை: கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக தனியார் பேருந்து ஓட்டுநர் தனது பேருந்தை பின்னால் இயக்கி மற்றொரு பேருந்து மீது மோதி அச்சுறுத்திய அதிர்ச்சி சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக பொள்ளாச்சியில் இருந்து ஏராளமானோர் இங்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். கோவை - பொள்ளாச்சி இடையேயான பேருந்து போக்குவரத்து சேவையை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர். இதனால், கோவை-பொள்ளாச்சி இடையே அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பேருந்து, தனியார் பேருந்துக்கிடையேயான மோதல், பயணிகள் ஏற்றிச் செல்வதில் தனியார் பேருந்துகளுக்கிடையே மோதல், வேகமாக இயக்குதல், அதிக ஒலி எழுப்பும் பாடல்கள் இசைப்பது என பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த சூழலில் வழக்கமாகவே பேருந்து புறப்படும் நேரம் தொடர்பாக ஓட்டுநர்கள் இடையே தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொங்கல் தினத்தன்று காலை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கலைமகள் என்ற தனியார் பேருந்து மற்றும் ஜெய் என்ற தனியார் பேருந்துகள் புறப்படும் நேரம் தொடர்பாக ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெய் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் முன்கூட்டி பயணிகளை ஏற்றி புறப்பட்டு சென்றது.
இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் இயக்க வேண்டிய கலைமகள் என்ற தனியார் பேருந்து, வழியில் ஜெய் பேருந்தை முந்தி சென்றுள்ளது. பின்னர், ஈச்சனாரியை அடுத்த மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் கலைமகள் பேருந்து ஓட்டுனர், பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது பேருந்தை முந்தி சென்று முன்னால் தனது பேருந்தை நிறுத்திய ஜெய் பேருந்து ஓட்டுநர் குமார் மற்றும் நடத்துனர் மணிகண்டன் ஆகியோர் இறங்கி வந்து கலைமகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.
பின்னர், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இருவரையும் சமாதானம் செய்து பிரித்துவிட்ட நிலையில் இரண்டு ஓட்டுநர்களும் அவரவர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்க முற்பட்டனர். அப்போது, திடீரென முன்னால் நின்று கொண்டிருந்த ஜெய் பேருந்தின் ஓட்டுநர் தான் ஓட்டிச் சென்ற பேருந்தை திடீரென நடத்துனரின் உதவியுடன் பின்னால் இயக்கி கலைமகள் பேருந்து மீது மோதி அச்சுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கலைமகள் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications