கோவை மக்களே டிசம்பர் 28, 29 மிஸ் பண்ணிடாதீங்க.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மாநகராட்சியைச் சேர்ந்த பகுதிகளில் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நாளை டிசம்பர் 28 மற்றும் 29 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய சொத்து வரி, தண்ணீர் வரி, காலியிட வரிகளை மாநகராட்சி அலுவலகங்களிலோ, தங்களது மண்டலங்களுக்கு உட்பட்ட அலுவலகங்களிலோ செலுத்தி வருகின்றனர். இந்த வரிகளின் மூலமாகத் தான் மாநகராட்சிப் பகுதிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: வார்டு எண் 7, 8க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகில், காளப்பட்டியிலும், வார்டு எண் 39க்கு தக்ஷா ஷான்ஷெரி அப்பார்ட்மெண்ட் (Daksha Shanshery Appartment), தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளியிலும் (டிசம்பர் 28, சனிக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 40க்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொங்காளியூர், வீரகேரளத்திலும் (டிசம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 28க்கு காமதேனு நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும் (SI Ward office), வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையத்திலும், வார்டு எண் 96க்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சியிலும், வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28, 29) ஆகிய இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications