நகராட்சி நிர்வாகத்தில் ஒரு மைல்கல்! கணவனை இழந்த பெண்ணுக்கு ஓட்டுநர் பணி! பொள்ளாச்சி சேர்மனின் புதுமை
கோவை: கணவனை இழந்த பெண் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் நகராட்சி ஓட்டுநராக பணி வழங்கியுள்ளார் பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்.
Recommended Video
இதனை திமுக ஆட்சிக்கு மற்றுமொரு சாட்சி என அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் சபாநாயகருக்கு பெண் ஒருவர் டவாலியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த புதுமையை படைத்துள்ளார் பொள்ளாச்சி நகராட்சி சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன்.

பொள்ளாச்சி நகராட்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர்மன்ற தலைவராக இருப்பவர் சியாமளா நவநீதகிருஷ்ணன். கல்லூரி பேராசிரியராக இருந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவர் என்பதால் மிகுந்த கவனமுடன் மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் கணவனை இழந்த கைம்பெண்ணான சாந்தி என்பவர், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாகவும் ஏற்கனவே வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருப்பவதாகவும் கூறி திமுக சேர்மன் சியாமளா நவநீதிகிருஷ்ணனிடம் வேலை கேட்டிருக்கிறார்.

தற்காலிக ஓட்டுநர்
கணவனை இழந்த சாந்தியின் வேண்டுகோளை பரிசீலித்த சியாமளா இது தொடர்பாக நகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட தகுதிகள் இருந்த காரணத்தால், பொள்ளாச்சி நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நகராட்சி ஒன்றில் பெண் ஒருவர் ஓட்டுநராக பணியில் சேர்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள்
பொள்ளாச்சி திமுக நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மேற்கொண்ட இந்த புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனிடையே இந்த நிகழ்வை பதிவிட்டு திமுக ஆட்சிக்கு மற்றுமொரு சாட்சி என அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

திறமை பளிச்சிடுகிறது
இதுநாள் வரை தனது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் நகராட்சி அலுவலகத்திற்கும் வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டிருந்த சாந்திக்கு, இப்போது தனது திறமையை வெளிப்படுத்த ஒரு வாசல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் சியாமளா.












Click it and Unblock the Notifications