தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் அடேங்கப்பா குட்டி கரணம்- மீண்டும் போட்டியாம்!
கோவை: தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடுகிறாராம். முன்னதாக தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் மன்சூர் அலிகான்.
லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் வந்துவிட்டால் போதும்.. .நடிகர் மன்சூரலிகான் செய்யும் அன்பான சேட்டைகள் அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.
கடந்த திண்டுக்கல் லோக்சபா தேர்தலின் போது மக்கள் தம்மை பார்க்க வேண்டும் என்பதற்காக காய்கறி விற்பனை முதல் அத்தனை வேலைகளையும் செய்து பார்த்தார். என்ன மக்கள்தான் ஓட்டுப் போடவில்லை.
அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்தார் மன்சூரலிகான். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தனி கட்சி தொடங்கிய கையோடு கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அப்புறம் என்ன தன்னை பேசுபொருளாக்குவதற்காக நாய்களுடன் நடுத்தெருவில் கொஞ்சி குப்பைகளுக்கு நடுவே அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார். அதேபோல் மீன்களை வெட்டும் வேலைகளை செய்தார். திடீரென நான் தேர்தலிலேயே போட்டியிடவே இல்லை என ஜகா வாங்கினார்.
இன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. ஆனால் மன்சூரலிகான் வேட்புமனுவைத் திரும்பப்பெறவில்லை. சுயேட்சை சின்னம் பெறுவதற்காக தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருக்கிறார்.
அடேங்கப்பா செம குட்டிகரணம் இருக்கே!