கோவை மக்களே வெளியூர் போறீங்களா?.. உங்களுக்குத்தான் குட் நியூஸ்.. ஸ்பெஷல் பஸ்கள் வந்தாச்சு
கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்தம், மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவைக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த மக்களும் என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவையைப் பூத்தி செய்வதில் முக்கியப் பங்குவகிப்பது பேருந்து போக்குவரத்து சேவைதான். தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் பேருந்து நிலையங்களில் வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், இனிய பயணத்தை மேற்கொள்வதற்காகவும் ஒவ்வொரு முறையும் தொடர் விடுமுறை, பண்டிகை போன்ற சமயங்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்தம் மற்றும் பெளர்ணமி, மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 14 முதல் 17 ஆம் தேதி வரை மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தின் சார்பில் வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்தமான செப்டம்பர் 14 முதல் 16 ஆம் தேதி வரையும், மற்றும் பெளர்ணமி, மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துக் கழகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்தி தங்களது ஊர்களுக்கு இனிமையான பயணத்தை மேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications