இன்னும் ஒரே மாதம் தான் அதிமுக.. பாஜக கூட்டணியில் வரப்போகும் மெகா மாற்றம்.. வானதி சஸ்பென்ஸ்
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இப்போதிருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் வியூகங்களுடன் களத்தில் பரபரக்க தொடங்கிவிட்டனர். ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜகவும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் டிசம்பர் முடிவுக்குள் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு பாஜக மேலிடம் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து வானதி சீனிவாசன் அடுத்த ஒரே மாதத்தில் தங்கள் கூட்டணி வலுவடையும் என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்துக்களின் கனவாகும். அதற்கு அனுமதி கொடுத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் திமுக அதை இரண்டாம் பட்சமாக தான் பார்க்கிறது. அதன் காரணமாக தான் திமுக அரசு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர்.

கம்யூனிஸ்ட்.. காங்கிரஸ் பெரிய கட்சியா
திமுக சிறுபான்மை மக்களுக்கான பாதுகாவலர்கள் போல வேஷம் போடுவார்கள். அங்கு மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது. அதை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான ஒரு கூட்டணியாக உருவாகும். தமிழ்நாட்டில் நாங்கள் தான் பலமான கூட்டணி.
திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி கிடையாது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் எல்லாம் பெரிய கட்சியா என்றார். அப்போது விஜய் அமித்ஷா சந்திப்பு நிகழுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், யார் யாரை எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெல்லிக்காரர்கள் சரியாக செய்துவிடுவார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
திமுக வாக்கு பிரியும்
வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகிறார்கள். அதற்கு வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி வரைக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள், பட்டியலில் பெயர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் ஆன்லைனில் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது. வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சட்டமன்ற தேர்தலில் திமுகவினரின் வாக்குகள் பிரியும். திமுக நிர்வாகிகள், தொண்டர்களே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள்.
நேற்று கமல்.. இன்று விஜய்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதையெல்லாம் 2026 தேர்தல் முடிந்த பிறகு ஆலோசனை செய்து கொள்ளலாம். கடந்த 2021 தேர்தலில் கோவையில் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் கமல் கட்சி இப்போது எங்கு உள்ளது. திமுகவுடன் இணைந்துவிட்டார்கள் தானே. அதேபோல தான் என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறேன்.
கோவை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கிறோம். எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் அந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கிறோம். இருப்பினும் அரசின் நிதிகளை பெறுவதில் சிக்கல் உள்ளது. அதிகமான பெண்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் உள்கட்டமைப்பை பலப்படுத்தினால் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கிடைக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications