கோவை டூ ஸ்ரீவில்லிப்புத்தூர்.. ஹெலிகாப்டரில் பறந்து சென்ற அதிமுக நிர்வாகி.. புதுசு புதுசா ஐடியா..!
கோவை: கோவையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்.
கோவையில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அதிமுக நிர்வாகி ஹெலிகாப்டரில் பறந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த பயணத்திற்காக பல லட்ச ரூபாய் கட்டணமாக அவர் கட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இ.பி.எஸ்.ஆதரவாளர்
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் மாநில துணை செயலாளராக இருப்பவர் விஷ்ணு பிரபு. கட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தீவிர ஆதரவாளரான இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தாராளபிரபு
தொழிலதிபரான விஷ்ணு பிரபு கட்சிக்காக செலவு செய்வதில் தாராள பிரபுவாக இருக்கிறார். இந்நிலையில் கோவையில் இருந்து நான்கரை மணி நேரத்தில் செல்லக்கூடிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அரைமணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று தரிசனம் செய்திருக்கிறார் விஷ்ணு பிரபு. தன்னுடன் தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர் அழைத்துச்சென்றார்.

கவன ஈர்ப்பு
இது குறித்து கருத்துக் கூறியுள்ள விஷ்ணு பிரபு, அதிமுக ஆட்சி தமிழகத்தில் 3-வது முறையாக மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றதாக தெரிவித்திருக்கிறார். இதனிடையே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காக இது போன்ற நிகழ்வுகள் இனி தொடர்ந்து நடைபெறக் கூடும் என்றும் புதுசா புதுசா யோசித்து சீட் பெறுவதற்காக அரசியல்வாதிகள் வகுக்கும் வியூகம் எனவும் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.

துணை முதலமைச்சர்
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் முதலமைச்சரே சாலை மார்க்கமாக காரில் தான் பயணித்து வருகிறார். அதேபோல் துணை முதலமைச்சரும் இன்னும் கார் பயணம் தான் மேற்கொள்கிறார். அப்படியிருக்க ஜெயலலிதாவை போல் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அதிமுக நிர்வாகி விஷ்ணு பிரபு.












Click it and Unblock the Notifications