என்னை யாரும் இயக்க முடியாது.. பொறுத்திருந்து பாருங்க - செங்கோட்டையன் பரபரப்பு
கோவை: 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது. தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கம் கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இருந்து தன்னிடம் உறுதியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, இதுகுறித்து பின்னால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்றார்.

வெளியில் சொல்ல முடியாது
மேலும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது என்றார். அதிமுக குடும்ப கட்சியாக இயங்கி வருவது உங்களுக்கு எல்லாம் தெரியும். மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை நான் சொல்ல தேவையில்லை என்றார்.
செங்கோட்டையனை இயக்கும் பாஜக?
உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என்னைத் தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என்றார். மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருப்பது குறித்த கேள்விக்கு, இதனை அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைத்திருப்பது குறித்த கேள்விக்கு, அது அவருடைய விருப்பம் என்று கூறினார்.
கட்சியில் தலையிடும் குடும்பம்
அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, கட்சியில் மகன் தலையிடுகின்றார். மைத்துனன் தலையிடுகின்றார். மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது.
அதனால் அதைப் பற்றி சொன்னேன் என தெரிவித்தார். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்.
பேச்சுவார்த்தை
அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்த கேள்விக்கு, அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என்ற கேள்விக்கு, யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றார். பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா என்ற கேள்விக்கு, உறுதியாக என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications