கோவை பெண் டிரைவர் ஷர்மிளா டிஸ்மிஸ்! கனிமொழி எம்பியின் டிக்கெட் பிரச்சனை தான் காரணமா? தந்தை பகீர்
கோவை: கோவை தனியார் பஸ்சில் பெண் டிரைவராக இருந்த ஷர்மிளா இன்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் அவரது பஸ்சில் திமுக எம்பி கனிமொழி பயணித்த சிறிது நேரத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பின்னணியில் நடந்தது பற்றி ஷர்மிளாவின் தந்தை மகேஷ் விவரித்துள்ளது.
கோவையில் தனியார் பஸ் ஓட்டி புகழ்பெற்றவர் ஷர்மிளா. இளம்பெண்ணான இவர் சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார். பொதுவாக பஸ்களை ஆண்கள் தான் அதிகமாக ஓட்டி வரும் சூழல் ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்ட பெற்றது.

இதன்மூலம் ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமானார். மேலும் அவரை சந்தித்து பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளாவை ஓட்டிய பஸ்சில் சிறிது தூரம் பயணித்து அவரை பாராட்டினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். அப்போது அவர் ஷர்மிளா ஓட்டும் பஸ்சில் பயணித்தார். காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை கனிமொழி அவரது பஸ்சில் பயணம் செய்தார். இந்த வேளையில் கனிமொழி எம்பி ஷர்மிளாவை கட்டியணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் கனிமொழி எம்பி பயணத்தை முடித்த பிறகு சிறிது நேரத்தில் ஷர்மிளாவினர் டிரைவர் பணி காலியாகி உள்ளது. அதாவது அவர் தனியார் பஸ் நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை கனிமொழி எம்பி பஸ்சில் பயணித்த சிறிது நேரத்தில் இந்த நடவடிக்கை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷர்மிளா பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு காரணங்கள் தற்போது பரவி வருகின்றன.
இந்நிலையில் தான் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி ஷர்மிளாவின் தந்தை மகேஷ் விளக்கியுள்ளார். இன்று எனது மகள் டிரைவராக இருந்த பஸ்சில் பெண் கண்டக்டர் இருந்தார். அப்போது தான் கனிமொழி எம்பி பயணம் செய்தார். அவர் கனிமொழி எம்பியிடம் டிக்கெட் கேட்டார். அப்போது ஷர்மிளா எம்பியிடம் டிக்கெட் கேட்காதீர்கள். அவர் ஏற்கனவே டிக்கெட் எடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் காந்திபுரத்தில் இருந்து சோமனூருக்கு டிக்கெட் எடுத்த நிலையில் பீளமேட்டில் இறங்கினார். இதற்கிடையே தான் எம்பி டிக்கெட் எடுத்துவிட்டு தான் பயணித்தார். அவரிடம் டிக்கெட் கேட்டது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. என் மகளுக்கும், பெண் கண்டக்டருக்கும் விவாதம் நடந்தது. இதையடுத்து பஸ்சை காந்திபுரத்தில் நிறுத்திவிட்டு பஸ் நிறுவன அலுவலகத்துக்கு சென்றோம்.
அங்கு பெண் கண்டக்டர் ஒருமாதிரியாக பேசுகிறார் எனக்கூறி ரிலீவ் ஆகி கொள்வதாக தெரிவித்தார். மேலும் கனிமொழி எம்பி பஸ்சில் வருவது தொடர்பாக 2 மேனேஜரிடம் முன்கூட்டியே நான் கூறினேன். அதில் ஒருவர் இப்போது நான் எதுவும் தகவல் கொடுக்கவில்லை என கூறினார். இதையடுத்து நான் இந்த வயதில் பொய் சொல்வேனா?. பொய் சொல்ல நான் என்ன பைத்தியக்காரனா? என கேட்டேன். அப்போது எங்களின் பப்ளிசிட்டிக்காக வாகனம் ஓட்டுவதாக கூறியதோடு மகளை கூட்டிக்கொண்டு செல்லும்படி கூறினார்கள். இது மனவேதனையாக உள்ளது'' என வருத்தத்தை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications