‛ரோட்டில் தெரிந்த உருவம்’.. மருதமலை கோவில் மலைப்பாதையில் திக்திக்! உலாவும் சிறுத்தையால் எச்சரிக்கை
கோவை: கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் மலைப்பாதையில் மீண்டும் இரவில் சிறுத்தை உலவ தொடங்கி உள்ளது. காரில் சென்றவர்கள் சிறுத்தையை பார்த்ததும் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று மருதமலை. இந்த மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் என்பது முருகனின் 7 ம் படை வீடாக அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது.

தைப்பூசம் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் பிற நாட்களிலும் கோவிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு மலைமேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சுமார் 900 படிக்கட்களை கடந்து செல்ல வேண்டும்., வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையின் வழியாக தினமும் பைக், கார்கள், மினிபஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர் இந்த மலைப்பாதை என்பது வனப்பகுதியின் வழியாக செல்கிறது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் உலவும்.
இந்நிலையில் தான் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று உலவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இரவு நேரத்தில் கார் ஒன்று மருதமலை கோவில் மலைப்பாதையில் சென்றது. அப்போது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று நடமாடி உள்ளது. அதாவது மலைப்பாதையின் முதல் வளையில் சிறுத்தை நடமாடி உள்ளது
காரின் விளக்கில் இருந்து சென்ற ஒளியை பார்த்தவுடன் சிறுத்தை அங்கிருந்து அப்படியே நகர்ந்து வனப்பகுதிக்குள் ஓடியது. மலைப்பாதையில் சிறுத்தை நடமாடியதை காரில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாம் அலர்ட் ஆகி உள்ளது.
பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளின்படி மட்டுமே வாகனங்களை மலைப்பாதையில் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மருதமலை கோவில் மலைப்பாதையில் சிறுத்தை தென்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிறுத்தை சாலையை கடக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போதும் சிறுத்தை நடமாடுவது தெரியவந்துள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications