தட்டிக் கேட்டது குத்தமா.. கோவை அதிமுக நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து.. போதை ஆசாமிகளால் அதிர்ந்த கோவை
கோவை: கோவையில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், திருட்டு, சங்கிலிப் பறிப்பு என தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை சுங்கம் மைதானம் பகுதியில் உள்ள மேடை அருகே மது அருந்திக் கொண்டிருந்த போதை ஆசாமிகளை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகிகளை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார் மற்றும் ஈஷா செந்தில். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சுங்கம் மைதானம் பகுதியில் உள்ள மேடை அருகே சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அதிமுக நிர்வாகிகள் இருவரும் அந்த போதை ஆசாமிகளைக் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து
இந்த நிலையில், நேற்று சுரேஷ்குமார் மற்றும் ஈஷா செந்தில் ஆகிய இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த கும்பல் திடீரென அவர்களை வழிமறித்துத் தாக்குதலில் ஈடுபட்டது. மறைத்து வைத்திருந்த கத்தியால் அதிமுக நிர்வாகிகள் இருவரையும் சரமாரியாகக் குத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
நேரில் சந்தித்த எம்எல்ஏ
ரத்த வெள்ளத்தில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகளுக்கு ஆறுதல் கூறினர்.
போலீஸார் வழக்குப் பதிவு
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தட்டி கேட்ட நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications