திமுக ஐடிவிங் ஆபரேஷன் 2.0-க்கு பதிலடி! கோவையில் கொம்பு சீவப்பட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகள்!
கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தம் மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் தருவதற்கு தங்களது கட்சியின் ஐடிவிங்கை பலப்படுத்தி இருக்கிறது. திமுகவின் ஐடிவிங்குக்கு போட்டியாக அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியும் இப்போது பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக கோவையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
திமுகவின் ஐடிவிங்கில் கட்சித் தலைமை மாற்றங்களை செய்தது. இதனைத் தொடர்ந்து அரசு, கட்சி மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் அதிரடி பதில்களை கொடுத்து வருகின்றனர் திமுக நிர்வாகிகள். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. திமுகவுக்கு சளைத்தவர்களா நாங்கள் என களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.
எஸ்பி வேலுமணி
கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் தக்க வைக்க அக்கட்சி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. கொங்கு மண்டல தளபதி என அதிமுகவினர் புகழும் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது செல்வாக்கை பலப்படுத்துவதில் கவனமாக இருக்கிறார்.
கோவை மீட்டிங்
அதிமுகவைப் பொறுத்தவரையில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியின் பிரதான முகம் எஸ்.பி.வேலுமணிதான். திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் நடைபெற்ற போது தமக்கான மாஸை காட்டினார் எஸ்.பி.வேலுமணி. இதன் அடுத்தகட்டமாகவே இப்போது கோவையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் கோவை மண்டல ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி திமுகவுக்கு எப்படி கவுண்ட்டர் கொடுக்க வேண்டும் என்கிற பயிற்சியை கொடுத்துள்ளது எஸ்.பி.வேலுமணி டீம்.
திமுக மீது அட்டாக்
இக்கூட்டத்தில் பேசிய அதிமுக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளரும் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசுகையில், மாணவர்களின் கல்வி கடன் ரத்து , பெண்களுக்கு ஊக்கத்தொகை 1000 , சிலிண்டர் மானியம் 100 போன்ற பொய்யான அறிவிப்பை வெளியிட்டதுமில்லாமல் , மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப்பை ரத்து செய்து , தாலிக்கு தங்கம் போன்ற அற்புதமான திட்டத்தை ரத்து செய்து , ஸ்கூட்டி மானியத்தை ரத்து செய்து மிக கேவலாமான முறையில் ஆட்சி செய்கிறது திமுக. சமூக நீதி காக்கும் இயக்கம் திமுகவாம் , சமூக நீதி காத்த வீரமங்கை என எதிர்கட்சியினரும் பாராட்டி பட்டம் சூட்டப்பட்டவர் ஜெயலலிதா.
கட்சியின் நாளைய தலைவர்கள்
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தான் கட்சியின் எதிர்காலம். 200 ரூபாய் ஊதியத்துக்கு விலைக்கு போகும் ஊபிகள் அல்ல நீங்கள் , இன்றைய தலைவர்களை நிர்ணயம் செய்யும் நாளைய தலைவர்கள் நீங்கள் .... உண்மையாக உழையுங்கள், 13 ஆண்டுகாலம் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளராக இருந்து தான் இப்போது மாநில செயலாளராக சட்டமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் , மனதில் உண்மையும் , நேர்மையும் , உண்மையான விசுவாசமும் இருந்தால் நாளை நீங்களும் இந்த மேடையை அலங்கரிக்கலாம் என்றார். இதேபோல் வேலுமணியும் தம் பங்குக்கு அதிமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பேசினார். கோவையில் அதிமுக ஐடிவிங் கொம்பு சீவப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்..