பொள்ளாச்சி விவகாரம்... திமுகவுக்கு போட்டி... எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி போராட்டம்..!
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய யாரையும் தப்பவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. அண்ணா விட்டுவிடுங்க என இளம்பெண்கள் பூட்டிற அறைக்குள் கதறிய காட்சிகள் காண்போரை வெகுண்டெழச் செய்தது.

இந்த வழக்கை முதலில் காவல்துறை விசாரித்த நிலையில் பிறகு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக சிபிஐ நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி பொறுப்பில் இருந்த அருளானந்தம் என்பவரை கைது செய்துள்ளது.
மேலும், அவருடன் அவருடைய இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இந்த விவகாரத்தில் மேலும் சில பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் அவர்களையும் தப்பவிடாமல் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போட்டி ஆர்ப்பாட்டமாக அதே பொள்ளாச்சியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. உதயநிதி ஸ்டாலின் பெண்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான திமுகவினர் செயல்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தரப்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக தான் எதிர்கட்சியை அதுவும் 10 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத திமுகவை கண்டித்து ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications