அப்போ எம்ஜிஆர்.. இப்போ பாகுபலி.. எடப்பாடிக்கு ஆதரவாக பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்த அதிமுகவினர்
கோவை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அதிமுகவினர் வைத்துள்ள கட் அவுட் ஒன்று கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, பாகுபலி கெட்டபில் எடபபடி பழனிசாமிக்கு கட் அவுட் வைத்துள்ள அதிமுகவினர், அதில், கழகபொதுச்செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகங்களுடன் பிரமாண்டமாக வைத்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்த பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதில் எடப்படி பழனிசாமி வேகம் காட்டினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் கடுமையான சட்ட போராட்டங்களை நடத்தினர்.

பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி
எனினும் நீதிமன்ற தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்ததால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத்தலைமை கனவு சாத்தியம் ஆனது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய ஓபிஎஸ் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்ற்னார்.

ஆதரவாக கட் அவுட், பேனர்கள்
எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கட் அவுட்கள் மற்றும் போஸ்டர்கள் அடித்து தமிழகம் முழுவதும் கலக்கி வருகின்றனர். அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

பாகுபலி கெட்டபில் எடப்பாடி
இதனால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் எடப்பாடிக்கு ஆதரவாக வித விதமான போஸ்டர்களை காண முடிகிறது. அதில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அதிமுகவினர் வைத்துள்ள கட் அவுட் ஒன்று கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, பாகுபலி கெட்டபில் எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் வைத்துள்ள அதிமுகவினர், அதில், கழக பொதுச்செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகங்களுடன் பிரமாண்டமாக வைத்துள்ளனர். பாகுபலி பிரபாஸ் போன்று கையில் வாள் மற்றும் கேடயத்துடன் எடப்பாடி பழனிசாமி நிற்பது போன்ற கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட் அவுட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, உள்ளிட்டோர் படங்களும் இடம் பெற்றுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவினர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோவை மாவட்ட அதிமுகவினர் வைத்துள்ள இந்த கட் அவுட்கள் இடம் பெற்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதிமுகவினரும் அதிக அளவில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும் கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களில் பரவுகிறது
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர் அணிவது போன்ற வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு நிற கண்ணாடியும் அணிவித்தார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் எடப்பாடி பழனிசாமி காட்சி அளித்த படங்கள் அதிகம் கவனம் பெற்ற நிலையில் தற்போது பாகுபலி கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வைத்துள்ள இந்த கட் அவுட்டும் அதிமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications