பெரும் பதற்றம்!! பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு.. இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு
கோவை: பொள்ளாச்சி அருகே கோதவாடி குளம் நிரம்பியதைப் பார்வையிட வந்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்துச் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள குருநல்லிபாளையம் ஊராட்சியில் 152 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளம் உள்ளது
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளம் நேற்று இரவு நிரம்பியது

நிரம்பிய குளம்
இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிரம்பியது கொண்டாடும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குளக்கரையில் உள்ள கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அப்போது வழிபாட்டிற்கு வந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், நிரம்பிய தண்ணீரைப் பார்வையிட்டு மலர் தூவி வழிபாடு செய்தார்

பொள்ளாச்சி ஜெயராமன்
இந்த குளத்தைச் சீரமைத்தது தாங்கள்தான் என அங்குள்ள திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் உரிமை கோரியதால் அங்கு ஏற்கனவே கடந்த சில நாட்களாகப் பதற்றம் நிலவியது. இந்தச் சூழலில் தான் அதிமுகவினர் விடுத்த அழைப்பின் பெயரில் பொள்ளாச்சி ஜெயராமன் அங்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மோதல்
இது தொடர்பாக அங்கிருந்த திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் மோதல் ஏற்படலாம் என்ற சூழல் உருவானது. அப்போது அங்குப் பாதுகாப்புப் பணிக்கு இருந்த போலீசார், பொள்ளாச்சி ஜெயராமனைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

செருப்பு வீச்சு
இருப்பினும், அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கிச் செருப்பை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் வழிபாடு நடத்துவதற்காகப் போடப்பட்ட சாமியான பந்தல்களை மற்றும் நாற்காலிகளை காவல்துறையினர் அகற்றினர்












Click it and Unblock the Notifications