3வது பவர் சென்டர்.. அமைச்சர்களை விமர்சித்து கோவை திமுக செயலாளர் பேசியதாக ஆடியோ லீக்.. பின்னணி
கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் பேசுவது போன்று ஒரு ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நிர்வாகிகளை விமர்சித்துப் பேசுவதாக உள்ளது. இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது அல்ல என கார்த்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக 2016 முதல் 2021 வரை இருந்தவர் கார்த்திக். இவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போதிலும் தோல்வி அடைந்தார். கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலுமே திமுக தோல்வியை தழுவியது.

முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தற்போது திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சி தேர்தலில் இவரது மனைவி லக்குமி இளஞ்செல்வி போட்டியிட்டார். இவருக்குத்தான் மேயர் பதவி தரப்படும் என அப்போது எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கல்பனா என்பவருக்கு மேயர் பதவி அளிக்கப்பட்டது. எனினும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக லக்குமி இளஞ்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.
எனினும் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை விமர்சித்து கார்த்திக் பேசியதாக கூறி ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
"அரசியல்ல வந்து இவர் ஒருவர் ஒருத்தருத்தான் முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா, சசிகலா தான் முடிவு எடுத்தனர். 3வதாக ஒரு நபருக்கு பவர் இல்லைங்க. அண்ணாநகர் கார்த்தி வீட்டில் பார்த்தீங்கன்னா, தினமும் காலை 200, 300 பேர் நிற்பார்கள். அவர் மீட்டிங்கில் இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். காலை 8.30 மணிக்கு தான் எழுவார். 10.30 மணி வரை உடற்பயிற்சி செய்வார். தொழில் நிமித்தம், டெண்டர் விசயம் தொடர்பாக வந்திருப்பவர்களை அந்த நேரத்தில் பேச அனுமதிப்பார். அவர் மாடியில் இருந்து கீழே வருவதற்கே 11.30 மணி ஆகிவிடும். அவர் ஒரு பவர் சென்டர்.
அடுத்ததாக அன்பில் மகேஷ் எங்கே தங்கியிருப்பார் என்று திருச்சியில் இருப்பவர்களுக்கே தெரியாது என்கிறார்கள். கே.என்.நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இவரை அப்படிப் பார்க்க முடியாது என அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
என்னுடைய கணிப்பு சரியாக இருந்திந்தால், எனக்கே மேயர் பதவி வேண்டியதில்லை.. புத்திசாலித்தனமான அரசாக இருந்திருந்தால், கோவைக்கு மட்டுமாவது ஆண் மேயரை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்பதான் கட்சி நிற்கும். நேரு நுனிப்புல் மட்டும் மேய்வார். கோவை மாதிரி ஒரு ஊரில் பெண் மேயராக வந்து கட்சியில் என்ன சாதித்துவிட முடியும்.. 10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு பதில் கொடுக்க வேண்டும். பெண் மேயர் 10 எம்எல்ஏக்களுக்கு பதில் கொடுக்க முடியுமா? பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்ககூடாது" இவ்வாறு பேசியதாக ஆடீயோ வெளியாகி உள்ளது.
இதுகுறித்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான நா.கார்த்திக் ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில். நான் பேசியதாக பரவி வரும் ஆடியோ போலியானது என்றும், தான் அப்படி யாரிடமும் தவறாக பேசவில்லை என்றும் யாரோ திட்டமிட்டு கட்சி பெயரையும், என்னுடைய பெயரையும் கெடுக்க அந்த மாதிரி செய்திருக்கிறார். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications