காந்தியுடன் காஃபி, ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர் சீமான் - கலாய்த்து தள்ளிய அன்பில் மகேஷ்
கோவை: திருவள்ளுவர் திருக்குறள் எழுதும் போது ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தவர். ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர். காந்தியடிகளுடன் காஃபி சாப்பிட்டவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பீரங்கி படையில் பயிற்சி பெற்றவர். இப்படி பல அனுபவங்களைக் கொண்டுள்ள சீமானை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை. பெரியாரின் பெயரை சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழ்நாட்டில் நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார். திருவள்ளுவர் திருக்குறள் எழுதும்போது அவருக்கு நான்தான் ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தேன், ஹிட்லருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டேன், காந்தியடிகளுடன் சேர்ந்து காஃபி சாப்பிட்டேன், சுபாஷ் சந்திரபோஸ் பீரங்கி படையில் பயிற்சி அளித்தேன் என அளந்துகொண்டே போவார். அவரது பெயரை இங்கே குறிப்பிட்டு, எனது மரியாதையை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஒன்றிய பாஜக அரசு நம் மீது இந்தியை திணித்து, தமிழ் மொழியின் தொன்மையையும் நமது பண்பாட்டையும் அழிக்க பார்க்கிறது. அவர்களுக்கு அடிபணிந்து நாம் இந்தி படித்தால், நாம் யார் என்பதை மறந்துவிடுவோம். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இரும்பை பயன்படுத்தி உள்ளான் என சமீபத்திய ஆய்வறிக்கை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறது.
அப்படியானால், நமது பழமையும், தொன்மையும் என்னவென்று உலகிற்கு தெரியும். திருக்குறளை இன்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு, மொழி பெயர்த்துக்கொண்டு இருக்கின்றன. இப்படி தமிழ்மொழியை உலகெங்கும் கொண்டுசெல்ல உறுதுணையாக இருக்கிறார் நமது முதல்வர்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்துக்கு 'சர்வ சிக்ஷா அபியான்' என ஒன்றிய அரசு இந்தியில் பெயர் சூட்டியுள்ளது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை நாம் ஏற்றால்தான் ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய ரூ. 2,151 கோடி நிதியை தருவோம் என்கிறார்கள். நம் கொள்கையை அடகுவைத்து, அப்படி ஒரு நிதியை பெறவேண்டாம் என நமது முதல்வர் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல், ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டியுள்ளார்.
வேறு எந்த முதல்வருக்கு இப்படி ஒரு தைரியம் வரும்? எடப்பாடி பழனிசாமிக்கு வருமா? நிதி பகிர்வு மூலம், நியாயமாக நமக்கு வரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். நமது மாநிலத்தில் உள்ள 40 லட்சம் மாணவர்களின் கல்வியோடு, ஒன்றிய அரசு விளையாடுகிறது. இது, பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். இந்த மண்ணில், வேறு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. 7 ஆவது முறையும் திமுகதான் ஆட்சி பொறுப்பில் அமரும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்றார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பேசுகையில், தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டத்தை மறந்துவிட்டு, திமுகவின் வரலாறை யாரும் எழுதிவிட முடியாது. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அன்றே சொன்னார் அண்ணா. அதில் நாம் என்றும் உறுதியுடன் இருப்போம். இந்தியை ஏற்றால்தான் உங்களுக்கு நிதி தருவோம் என ஒன்றிய அரசு மிரட்டிப்பார்க்கிறது.
அப்படி இந்தியை ஏற்றுக்கொண்டுதான் நிதி பெற வேண்டுமென்றால், அந்த நிதி எங்களுக்கு தேவையில்லை என கூறியுள்ளார் நமது முதல்வர். நாட்டில் மொழி இருக்கும் வரை திமுக இருக்கும். கருப்பு-சிவப்பு கொடி இருக்கும்வரை தமிழ்நாட்டில் யாரும் இந்தியை திணிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகள் செல்வராஜ், சுப்பிரமணி ஆகியோருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோ.வி.செழியன் ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து, பணமுடிப்பு வழங்கினர்.












Click it and Unblock the Notifications