சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!
கோவை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்க முடியாது என்று அதிமுக கூறிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறி இருக்கின்றனர். கோவையில் ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்று அதிமுக கூறியதாகவும், வேண்டுமென்றால் திருப்பூரின் பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கைவிரித்ததாக கூறுகின்றனர்.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலையின் பேச்சுகள் முக்கியக் காரணமாக அமைந்தது. அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை அதிமுக அட்டாக் செய்தது. இதனால் தனிக் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

இதன்பின் 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி இறுதி செய்வதற்கு முன்பாகவே அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து பாஜக தலைமை நீக்கியது. இதற்கு அதிமுக முதன்மை காரணமாக இருந்தது. கொங்கு பகுதிகளில் அண்ணாமலை வளர்வதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை.
இதன்பின் கூட்டணி அமைக்கப்பட்டு மறைமுகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை, சேலம், தர்மபுரியில் தலா 2 தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. அதிலும் கோவையில் சிங்காநல்லூர் தொகுதியை அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் கோவை தெற்கு தொகுதி ஏற்கனவே பாஜக வசம் தான் உள்ளது. கோவையில் ஒரு தொகுதி மட்டுமே அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டி இருக்கிறார். இருந்தாலும் கோவையில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருடன் தெருமுனைப் பிரச்சாரத்தில் அண்ணாமலை தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஆனாலும் அதிமுக இறங்கி வர முடியாது என்று பிடிவாதம் காட்டுகிறது. அதேபோல் பாஜக கேட்டுக் கொண்டதற்காக திருப்பூர் பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அண்ணாமலைக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமே நல்ல செல்வாக்கு இருக்கிறது.
அவர் திருப்பூரில் போட்டியிட்டால் மீண்டும் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். அண்ணாமலைக்காக அதிமுக எந்தவொரு விஷயத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை என்றும் பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.











Click it and Unblock the Notifications