பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கும் அதிமுக? கடுப்பான எடப்பாடி பழனிசாமி! அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை
கோவை: பாஜகவுடன் கூட்டணிக்காக பல கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை சொன்னது அதிமுகவை இல்லை என கூறியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது, ஏற்கனவே உடைந்த அதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைக்க மத்திய தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது, அதனை உறுதி செய்யும் வகையில் பேசி இருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி,

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அது குறித்து ஆறு மாதத்திற்கு பிறகு தெரிவிப்போம் என பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை," பாஜக நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி, பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என பேசினார்கள். இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கிறார்கள் என பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்திருந்தார் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன். மேலும் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி," பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக சொல்லாதீர்கள்.. ஆறு மாதங்களுக்குப் பின் தான் கூட்டணி குறித்து பேசப்படும் என சற்று கோபமாகவே பேசி இருந்தார்.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது என்று தான் எந்த இடத்திலும் சொல்லவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நானும், அய்யா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை.
ஆனால் டிபேட்டுக்காக இது போன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். விவாதத்துக்காக நான் சொன்னதையும் எடப்பாடியார் சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க வை பற்றி அண்ணன் எடப்பாடியாரும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பா.ஜ.க வை திட்டுவதையே சிலர் நோக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை, அவர்களுக்கு தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எது போன்ற கூட்டணி வர வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். அப்படி என்றால் நானும் எடப்பாடியாரும் எப்படி ? அதை பற்றி தொடர்ந்து பேச முடியும். பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால் அங்கு விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்? ஏ.சி ரூமில் அமர்ந்து பத்திரிக்கையில் ஒரு பத்தி எழுதுகிறார்கள். அதை தவிர வேறு என்ன தெரியும் அவர்களுக்கு" என்றும் ஆவேசமாக கூறி சென்றார்.












Click it and Unblock the Notifications