கந்தனுக்கு அரோகரா.. தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்து நடனமாடிய பாஜக தலைவர் அண்ணாமலை
கோவை: கோவையில் நொய்யல் திருவிழாவில் தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு நடனம் ஆடினார்.
ஊழலுக்கு எதிராகவும் பாஜகவின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கியும் என் மண் என் மக்கள் எனும் நடைப்பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ளார். ராமநாதபுரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என தினமும் போய்க் கொண்டே இருக்கிறது.

அவ்வப்போது அண்ணாமலை ஓய்வு எடுக்கும் வகையில் இந்த பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
தனது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார். கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடந்து வரும் நொய்யல் திருவிழாவில் அவர் கலந்து கொண்டார். 5 ஆம் நாள் நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் அப்போது காவடி எடுத்து அங்கு பக்தி பரவசத்துடன் நடனமாடினார்.

மேலும் நொய்யல் ஆரத்தி வழிபாட்டிலும் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் உக்ரைன், ரஷ்யா போருக்கு பிறகு உலக நாடுகளில் 200 சதவீதம் அளவுக்கு எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் உயராமல் அதை மத்திய அரசு கட்டுப்படுத்தியது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications