"அதிக இடங்கள்" 2026ல் கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜக ஆட்சிதான்.. பற்ற வைத்த அண்ணாமலை!
கோவை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் என்றும், பாஜக ஆட்சி என்றே சொல்வேன் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநில அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு மீண்டும் ஒரு ரூபாய் கொடுத்து வருவதாக கூறிய அண்ணாமலை, பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அதிமுக - பாஜக கூட்டம் உறுதியாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறிய நிலையில், அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை தவிர்த்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் என்று கூறி ஆச்சரியம் கொடுத்தார்.

அண்ணாமலை பேட்டி
அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், இதுவரை இரு கட்சிகளும் இணைந்து ஒரே மேடையிலோ, ஒரு போராட்டத்தையோ கூட நடத்தவில்லை. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, இதுவரை கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறது.
திமுக மீது விமர்சனம்
2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக கொடுத்த வாக்குறுதியை மக்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போதுதான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியும். மாநில அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதும் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
வாக்குறுதிகள்
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாக்குறுதி என்ன ஆனது? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா? ஆனால் பாஜக தரப்பில் அனைவருக்கும் சிலிண்டர் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக கூறவில்லை. ஆனாலும் குறைத்திருக்கிறோம். பிரதமரின் மருந்தகம் இருக்கும் போது, முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதுவும் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சி
தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. சாதாரண தொண்டனாக என் பணியை செய்து வருகிறேன். 2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்றுதான் சொல்வேன்.
அதிக இடங்களில் பாஜக போட்டி
சட்டமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். ஆனால் பாஜகவின் தொண்டனாக பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புவேன். மற்ற கட்சிகளை வளர்க்க நான் இங்கு இல்லை. கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications