அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து ஊரே பேசுது.. ஆனா அண்ணாமலை மட்டும் பேச மறுக்கிறாரு பாருங்க
கோவை: பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேச மறுத்துவிட்டார். மேலும் அவர் பின்னர் பேசுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னோடிகளான ஜெயலலிதா, அண்ணாதுரை, எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைமை அவதூறு கருத்துகளை வெளியிட்டிருந்தது.

இது தொண்டர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்துள்ளது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதை அதிமுக, பாஜக இரு தரப்பினரும் வரவேற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோவையில் நடந்த யாத்திரையின் போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பின்னர் பேசுகிறேன். நான் யாத்திரையில் இருக்கிறேன், அதில் அரசியல் பேச மாட்டேன் என கூறினார். மேலும் அவர் கூறுகையில் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கான காரணத்தை அவர்களது அறிக்கையில் பார்த்தோம்.
இதுகுறித்து தேசிய தலைமை பேசுவார்கள். அவர்கள்தான் சரியான நேரத்தில் விளக்கமளிப்பார்கள் என்றார். மீண்டும் மீண்டும் அதிமுக கூட்டணி முறிவு குறித்து கேட்டதற்கு அண்ணாமலையோ, பாஜக ஒரு தேசிய கட்சி என்பது உங்களுக்கு தெரியும். எனவே கூட்டணி முடிவுகளை தேசிய தலைமைதான் பேசுவார்கள் என கூறிவிட்டு வேறு எந்த கருத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
தமிழக பாஜக- அதிமுக இடையே அவ்வப்போது கூட்டணியில் பிரச்சினையும் மோதல் போக்கும் நிலவி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணாமலை ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்து தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் என ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையைும் அதிமுக மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பாஜக- அதிமுக நிர்வாகிகள் ஆளாளுக்கு ஒன்று பேச இந்த விவகாரம் சற்று தணிந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என ஒரு தகவலை கூறி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டார்.

அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை. ஜெயலலிதா, அண்ணா என்று எங்களின் முன்னோடிகளை அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
இது கட்சியின் முடிவு தான். அதையே நான் அறிவித்தேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து அடுத்த நாளே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சினையே இல்லை என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். கூட்டணி இல்லை என்பது கட்சியின் கருத்தாக ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் செல்லூர் ராஜூ இப்படி ஒரு கருத்து கூறுகிறாரே என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை எல்லாம் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்றும் கூட்டணி முறிந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை பாயலாம் என்றும் கூட்டணி வேண்டாம் என்பவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லையா என மறைமுகமாக அண்ணாமலை மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications