கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யை கைது செய்திருந்தால்..! குறுக்கே வந்த அண்ணாமலை
கோவை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யை கைது செய்திருந்தால் அடுத்த நாளே அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமென நினைத்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.

விஜய்யை முதல் குற்றவாளியாக வழக்கு பதிந்தால் அந்த வழக்கு நிற்காது. அல்லு அர்ஜுனுடைய வழக்கில் ஹைதராபாத்தில் இதே தான் நடந்தது. அதேதான் இங்கும் நடக்கும். சும்மா அவர்கள் அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம், ஒரு இரவு சிறையில் வைக்கலாம். அடுத்த நாள் ஃபெயில் கிடைத்து வெளியில் வரலாம் என்பதெல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற விளையாட்டுக்குச் சமம். தவெகவை ஆளுங்கட்சி நசுக்கப் பார்க்கிறது. தவெகவை காப்பாற்ற வேண்டிய கடமை பாஜகவுக்கு இல்லை.
தவெக விஜய்யையும் மத்திய அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வயிற்றெரிச்சலால் விமர்சித்து பேசுகிறார். அவரது கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதால் அவர் கோபத்தில் இருக்கிறார். தவெக விவகாரத்தில் நாங்கள் ஆதரவான கருத்து சொல்கிறோம். அடைக்கலம் கொடுக்கவில்லை.
கரூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) காலம் தாழ்த்தாமல் விசாரிக்க வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் எஸ்ஐடி அறிக்கை வரட்டும், பிறகு சிபிஐ விசாரணை தேவையா இல்லையா என பார்க்கலாம்.
நிர்வாகிகள் முதல் அனுமதி வழங்கிய அதிகாரிகள் வரை அனைவரையும் விசாரிக்க வேண்டும். நீதிபதிகள் கருத்துகளை அரசியலாக்க தேவையில்லை. என் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்ததாக வீடியோவொன்று பரவி வருகிறது. அந்த மோசடியை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் நானே பேசியுள்ளேன்.
உரிய முறையில் புகாரும் அளித்துள்ளேன். இந்த சம்பவத்தில் வீடியோ வெளியிட்ட நபருக்கு, அந்த மோசடியால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் தொடர்ந்து ஆளுநரை சீண்டி பார்ப்பது சரியல்ல. ஆளுநர் கேட்கும் கேள்வி சரியானதுதான். ஆளும் கட்சி அனைத்தையும் அனுசரித்து போக வேண்டும்.
ராகுல் மணிப்பூர் போகும் போது பாஜகவினர் கரூருக்கு வரக் கூடாதா? முதலமைச்சர் செல்லக்கூடிய நிகழ்ச்சி எத்தனை நடக்கிறது? அப்படியானால் ஒவ்வொரு அனுமதியும் முதலமைச்சருக்கு தெரியுமா? என்றால் தெரிந்திருக்காது. பிரதமர் வரக்கூடிய நிகழ்ச்சிக்கு தெரிந்திருக்குமானால் தெரிந்து இருக்காது. நம்பிக்கையில் வருவதுதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications