இங்க என்ன நடக்குது.. கோவை குசும்புயா! ஜிஎஸ்டி, நிர்மலா ஹேஸ்டேக்குடன் அன்னபூர்ணா க்ரீம் பன் விளம்பரம்
கோவை: கிரீம் பன் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் குடும்ப உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பேச அந்த விவகாரம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி, நிர்மலா சீதாராமன் என்ற ஹேஷ்டேக் உடன் அந்நிறுவனம் கிரீம் பன் விளம்பரத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட இந்திய அளவில் பேசுபொருளானது. இதை அடுத்து ஜிஎஸ்டி நிர்மலா சீதாராமன் என்ற ஹேஷ்டேக் டெலிட் செய்யப்பட்டு மீண்டும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று முன் தினம் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆலோசணை நடத்தினார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய கோவை அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனே தானாக முன்வந்து, பொது நிகழ்ச்சியில் அப்படி பேசி சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டார். தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் குறித்து தமிழக பாஜக செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து பலரும் அறிக்கைகள் பேட்டிகள் என கொடுத்து வந்த நிலையில் நிலையில், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ வானிதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

விவகாரம் இவ்வளவு சீரியஸாக போய்க் கொண்டிருக்க ஜாலியாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது அன்னபூர்ணா நிறுவனம். அந்நிறுவனத்தில் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்தின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் க்ரீம்+பன்=க்ரீம் பன் என காஃபியுடன் விளம்பரம் போட அது இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. குறிப்பாக ட்விட்டரில் ஜிஎஸ்டி, நிர்மலா சீதாராமன் என்ற ஹேஸ்டேக் உடன் போட அதுவும் வேகமாக பரவியது.
இந்நிலையில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, ஜிஎஸ்டி, நிர்மலா சீதாராமன் ஹேஸ்டேக்குடன் இருந்த ட்வீட்டை டெலிட் செய்த அந்நிறுவனம், அடுத்து அந்த ஹேஸ்டேக்குகள் இல்லாமல் புதிதாக போஸ்ட் போட்டுள்ளது. இதனால் அந்த ட்வீட் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் மிரட்டல் எதுவும் வந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications