நம்மளும் கிளம்பிட வேண்டியதுதான்..குளுகுளு ஊட்டிக்கு ஊர்சுற்ற போகலாம்! 5 நிமிஷம்..அசத்தல் அறிவிப்பு!
கோவை: கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மலைகளின் அரசியான ஊட்டிக்கு இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். மேலும் இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பிப்பதால் வெயில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான வெயில்: வெயிலைச் சமாளிக்க பேன், ஏர் கூலர், ஏசி என பொதுமக்கள் நாடிச் சென்றாலும் மின்தடை காரணமாக வீட்டில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அன்றாட வேலைகளை கூட செய்ய முடியவில்லை என பொதுமக்களும் தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்களும் கூறுகின்றனர். குளிர்பானங்கள் இளநீர் மோர் என எதைக் குடித்தாலும் பித்தம் தெளியவில்லை என்பது போல வெயிலை சமாளிக்க முடியாமல் நாளுக்கு நாள் மக்கள் திணறி வருகின்றனர்.
கோடை வாசஸ்தலங்கள்: அதே நேரத்தில் அவர்களின் ஒரே தேர்வாக கோடை வாசஸ்தலங்கள் இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் ஏற்காடு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களை நோக்கி மக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கோடை விழா: மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டியில் வரும் பத்தாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கோடை விழாவானது நடைபெற இருக்கிறது. அங்கு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர்கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை காண்பதற்காகவும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவிக்கவும் ஏற்கனவே பல சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு விரைந்துள்ளனர். இன்னும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்: அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவால் ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்களில் ஊட்டி செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகளை நாடத் தொடங்கி இருக்கின்றனர் பொதுமக்கள். செலவு குறைவு என்பதோடு பாதுகாப்பான பயணத்தை அரசு பேருந்துகள் வழங்கும் என்பதால் பொதுமக்களின் முக்கிய தேர்வாக அரசு பேருந்து சேவை இருக்கிறது. நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் ஊட்டிக்கு கோவையில் இருந்து 25 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்தும் ஏராளமான பயணிகள் உதகைக்குச் செல்வதால் அங்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மேலும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஊட்டிக்கு பேருந்து இயக்கப்பட இருக்கும் நிலையில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications