அந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த 2.50 லட்சம்.. தவறவிட்டவரிடமே ஒப்படைத்த பொள்ளாச்சி இளைஞர்
கோவை: பொள்ளாச்சி அருகே நியூஸ் பேப்பரில் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த ரூ. 2.50 லட்சத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த தேவம்பாடி இளைஞரின் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பணத்தை தவறவிட்டவரிடமே அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கேட்பாரற்று நியூஸ் பேப்பர் ஒன்று கிடந்த நிலையில் என்ன என்று இளைஞர் ஒருவர் அதைப் பார்த்துள்ளார். பின்னர், அதில் 500 ரூபாய் கொண்ட பணக்கட்டுகள் இருந்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட காளிாளையத்தைச் சேர்ந்த நபரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (25). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் குமார் வேலை விஷயமாக வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தேவம்பாடி வலசில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது, ஜமீன் முத்தூர் தனியார் பள்ளி அருகே சாலையோரம் சென்றுள்ளார்.
அந்த சாலையில், செய்தித்தாளில் சுற்றப்பட்ட நிலையில் பணம் கிடந்துள்ளது. இதையடுத்து, சந்தோஷ்குமார் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த செய்தித்தாள் பொட்டலத்தை எடுத்துப் பார்த்துள்ளார். அதனைப் பிரித்து பார்த்தபோது ரூ. 2.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், அருகில் யாரும் இல்லை. பணத்தை தேடிக் கொண்டும் யாரும் வரவில்லை.
இதையடுத்து, இளைஞர் சந்தோஷ் குமார் அந்த பணத்தை பத்திரமாக இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்து, அந்த பகுதியில் உள்ள மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் சாலையில் செய்தித்தாளில் சுற்றப்பட்ட நிலையில் இந்தப் பணம் கிடைத்ததாகக் கூறி ஒப்படைத்துள்ளார். அந்த செய்தித்தாளை போலீஸார் பிரித்து சோதனை செய்தபோது ரூ. 500 கொண்ட 5 கட்டுகள் இருந்துள்ளன. மொத்தம் ரூ. 2.50 லட்சம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பணத்தைத் தவறவிட்டவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பணத்தைத் தவறவிட்டவர் காளிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமார் மூலம் ரூ.2 .50 லட்சத்தை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர். அப்போது, ஈஸ்வரமூர்த்தி மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததுடன் சந்தோஷுக்கும், போலீஸாருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அடுத்த தேவம்பாடி கிராமப் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குமார் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு எதாவது ஒரு தனது சொந்த தேவையே நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், சாலையில் கிடந்த பணத்தை நோ்மையாக எடுத்து வந்து போலீஸாரின் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோ்மையாக பணத்தை ஒப்படைத்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications