விர்னு "இறங்கிய" ஆடுகள்.. அண்ணாந்து பார்க்க வைத்த கோவை அன்னூர்.. மலைத்து போன விவசாயிகள்.. என்னாச்சு?
கோவை: மதுரையை தொடர்ந்து கோவை மாவட்ட கால்நடை விவசாயிகளும் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.. என்ன அது?
திண்டுக்கல், மதுரை, வேலூர் என பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆட்டு சந்தைகளானது, தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை.. தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், ஆடி மாதம் போன்ற விசேஷ நாட்களிலும் இதுபோன்ற கால்நடை சந்தை படுபிஸியாக இருக்கும். காரணம், கிராம பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறுவதால், அசைவ விருந்து பரிமாறுவார்கள்..
அசைவ விருந்து: தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து உறவினர்களுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் என்பதாலும், ஆடுகள் வியாபாரம் அமோகமாக நடக்கும். ரம்ஜான் பண்டிகையும் நெருங்கி கொண்டிருப்பதால், கால்நடை விவசாயிகளும் இதை நம்பியே உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும், ஆடுகள் அதிக அளவு விற்பனையாக துவங்கி உள்ளது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் , தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மிகுந்த கெடுபிடிகளுக்கு ஆளாகி வருகிறார்களாம்.
ஆடுகள் வரத்து: ஏற்கனவே, ஆடுகள் வரத்து குறைவு காரணமாக, விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் கவலையில் உள்ள நிலையில், தேர்தல் விதிமுறை காரணமாக, கால்நடை வாகனங்களை கொண்டுசெல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்..
அதேபோல, ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் அதிக பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலைமை உள்ளது. இதனால், அந்த பணத்தை, வியாபாரிகளுக்குள் பகிர்ந்துகொண்டு, அதன்பிறகே வியாபாரத்துக்கு செல்ல முடிகிறதாம்.. அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் உள்ளதால், தங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்க வேண்டும் என்றும் ஆடு வியாபாரிகள் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அன்னூர்: நேற்றுகூட மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று கோவை மாவட்டம் அன்னூரிலும் கோரிக்கை கிளம்பியிருக்கிறது.. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுவது வழக்கம்... கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
வழக்கமாக ரம்ஜான் பண்டிகை நேரத்தில், இந்த அன்னூர் ஆட்டுச் சந்தையில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை ஆடு, கோழிகள் விற்பனையாகுமாம்.. இப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வியாபாரம் நடப்பதாக கவலையுடன் சொல்கிறார்கள்.
தீர்வு என்ன: அதாவது, ஒரு நபர் வெறும் 49 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் நிலை உள்ளதாம்.. இதற்கு உடனடியாக ஒரு தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள் கால்நடை விவசாயிகள். ரம்ஜான் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளநிலையில், தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே கோரிக்கைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications