சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் நாத்திகம், கடவுள் மறுப்பு- 'அடேங்கப்பா' விளக்கம் தந்த வானதி சீனிவாசன்
கோவை: சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் நாத்திகம், கடவுள் மறுப்பு எல்லாமே என புத்தம் புதிய விளக்கம் தந்துள்ளார் பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் லோக்சபா எம்.பி. ஆ.ராசா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நேற்று ஆஜராகி ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தார்.

பி.வில்சன் தமது வாதத்தில், அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு என்பது மத நம்பிக்கையை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நாத்திக கொள்கைகளையும்தான் பாதுகாக்கிறது. நாத்திக கோட்பாடுகளை ஒருவர் பின்பற்றுவது ஏன் என்பது குறித்து விளக்கம் தர, கருத்து தர அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு உரிமை வழங்குகிறது. இதனடிப்படையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கே தொடர முடியாது. பெரும்பான்மை நம்பிக்கையை பாதுகாக்கும் சமயத்தில் மாற்று கருத்தாளர்களின் கருத்து உரிமையையும் பாதுகாக்க வேண்டும். அத்தகையை உரிமையை பாதுகாக்க வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமையும் கூட என வாதிட்டிருந்தார்.
இதற்கு வானதி சீனிவாசன் அளித்த பதில்: நாத்திக கொள்கை, கடவுள் மறுப்பு என்பது எல்லாமே சனாதன தர்மத்தின் ஒருபகுதி. நம்பிக்கை இல்லாதவர்களை கூட அரவணைக்கிற பக்குவம் ஹிந்து மதத்துக்கு மட்டுமே இருக்கிறது. மற்ற மதங்களில் இத்தகை சித்தாந்தத்துக்கு இடமே இல்லை. ஹிந்து சனாதன தர்மத்தில் மட்டும்தான் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களைக் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தாலும் கூட அரவணைக்கிற பக்குவம் இந்துமதத்துக்கு மட்டுமே உண்டு. இந்த மாதிரி மதநல்லிணக்கம், மதங்களை தாண்டி மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் எல்லாமே சனாதன தர்மத்துக்குதான் உண்டு. இதனை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொள்ளாத காரணத்தால் சனாதன தர்மம் வேறு; நாத்திக கொள்கை வேறு என பேசுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடப்பதாக திமுக சொல்கிறது; ஆனால் சமூக நீதிக்கு எதிரான செயல்கள்தான் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் கொள்கைகளைத்தான் பேசுகிறார். தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என கேட்டார்கள். ஒரு கட்சி எப்படி வளரும்; வளர்ச்சிஅடையும் என்பதை எல்லாம் காலம்தான் தீர்மானிக்கும். இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.












Click it and Unblock the Notifications