கோவையில் இங்கெல்லாம் 3ம் கண்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகம்.. வாகன ஓட்டிகளே உஷார்
கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீடு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40.கிமீ வேகத்திற்கு மேல் போனால் தானாக கேமராவில் பதிவு செய்து அபராத ரசீதை அனுப்பி வைக்கும்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் என்றால் அது கோவை தான். கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை பல்வேறு நகரங்களின் சந்திப்பாகவும், கேரளாவின் நுழைவு வாயிலாகவும் உள்ளது.

கோவையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் அதிக அளவு அமைந்து வருவதால், கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. கோவையில் சென்னையைப் போல் ஒவ்வொரு பெரிய சிக்னலும் மேம்பாலங்களும் இல்லை. இதனால் கோவையில் சின்ன சின்ன சிக்னல்களுக்கு மாற்றாக யூடர்ன் அல்லது ரவுண்டானா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
கோவையில் மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்றால் அது அவிநாசி சாலை தான். இதற்கு அடுத்தபடியாக சத்தி ரோடும். பாலக்காடு ரோடும் உள்ளது. மேட்டுப்பாளையம் ரோடும், பொள்ளாச்சி ரோடும், திருச்சி ரோடும் இதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளாகும்.
கோவை மாநகரில் அதிவேகமாக செல்வோரால் விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி வேகமாக செல்வோரை கண்டுபிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கோவையில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
கோவை மாநகரில் விபத்து ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீடு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40.கிமீ வேகத்திற்கு மேல் போனால் தானாக கேமராவில் பதிவு செய்து அபராத ரசீதை அனுப்பி வைக்கும். அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, சத்தியமங்கலம் சாலையில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளை பொருத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.
40 கிலோமீட்டர் வேகத்தை கடக்கும் வாகனங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதேபோன்று திட்டம் சென்னையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக கொண்டுவரப்படவில்லை. சென்னையில் பரிசோதனை அடிப்படையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் கண்காணிப்பில் தான் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் இதேபோல் கோவையிலும் அபராத நடைமுறை எப்படி இருக்கும் என்பது திட்டம் அமலுக்கு வந்த பின்னரே தெரியவரும்.
கோவை மக்களே வாகனத்தில் செல்லும் அளவான வேகத்தில் செல்லுங்கள். அதிவேகத்தில் செல்ல வேண்டாம். அபராதம் விதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக.. எனவே விபத்து என்பது நம்மை மட்டுமல்ல, சம்பந்தமே இல்லாத இன்னொருவரையும் மோசமாக பாதிக்கும். யாரோ செய்யும் சிறிய அலட்சியம் எத்தனை பேர் உயிரை பறித்துள்ளது என்பது உங்களுக்கே தெரியும். எனவே வாகனத்தில் அசுர வேகத்தில் போக வேண்டாம்.












Click it and Unblock the Notifications