பாஜக இல்லைன்னா.. முபின் குடும்பத்தில் ஒருவருக்கு இந்நேரம் அரசு வேலை கொடுத்திருப்பார்கள்: அண்ணாமலை
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லாதிருந்தால் ஜமேஷா முபினின் வீட்டில் ஒருவருக்கு திமுக இந்நேரம் அரசு வேலை கொடுத்திருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் தெருவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் இறந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுக்கு ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேலும் விசாரணையில் முபின் ஏற்கெனவே கடந்த 2019 இல் தேசிய புலனாய்வு முகமை விசாரணை வளையத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவருடைய வீட்டிலிருந்து வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

என்ஐஏ விசாரணை
இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 54 மணி நேரம் கழித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது பயங்கரவாத தாக்குதல், மனித வெடிகுண்டு தாக்குதல், என சொல்லி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன்தான் இந்த தமிழக அரசு கோவை சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றியது.

பாஜகவுக்கு நன்றி கடன்
எனவே திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பாஜகவுக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும். பாஜக மட்டும் இந்த விவகாரத்தை கையில் எடுக்காதிருந்தால், முபினுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு, அவர்கள் போட்டிருந்த சதி திட்டம், தமிழகத்தில் 8 கோயில்கள் மீதான தாக்குதல் சதி திட்டம், முபின் தற்கொலை படையாக மாறுவதற்காக செய்த திட்டங்கள் ஆகியவை வெளியே வந்திருக்காது.

முபின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
இதை மறைத்தது திமுகதான். மே 19, ஆகஸ்ட் 18 ஆகிய தேதிகளில் வந்த உளவுத் துறை தகவலை திமுக மறைத்துவிட்டது. பாஜக நிர்வாகிகள் இந்த கோவை சம்பவத்தை கையில் எடுத்து மக்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் பேசவில்லை என்றால் சிலிண்டர் வெடித்து இறந்த முபினின் குடும்பத்தில் ஒருவருக்கு திமுக, இந்நேரம் அரசு வேலை கொடுத்திருக்கும்.

4 நாட்கள் கழித்து
இந்த உண்மைகளை வெளியே கொண்டு வந்ததற்கு பாஜகதான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளார். கோவை உக்கடம் சம்பவம் வெடிகுண்டு தாக்குதல் என்றும் அதை தமிழக அரசு சிலிண்டர் வெடிப்பு என்றே கூறி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications