இதுதான் அந்த ரகசியமா.. உதயநிதியை விளாசிய வானிதி சீனிவாசன்.. முதல்வர் ஸ்டாலின் மீதும் கடும் தாக்கு
நீட் தேர்வு விவகாரத்தில் இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் உதயநிதி வைத்திருந்தார் என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
கோவை: நீட் தேர்வு விவகாரத்தில் இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் உதயநிதி வைத்திருந்தார் என்று கேள்வி எழுப்பிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், திமுகவினர் தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்றார். தன் சொந்த அமைச்சர்களைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக முதல்வர் எதிர்க்கட்சிகள் மீது பாய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
பாஜக மகளிரணி சார்பாக கோவையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்..
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி, சீனிவாசன், " நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்படுகிறது.. பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக தடைகளைத் தாண்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியில் அறிந்து கொள்ள முடியும்.. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 8 ஆண்டு காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கழிப்பிடங்கள், பெண்கள் பெயரால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டத்தில் 65 சதவீதம் பெண் பயனாளிகள், சுயதொழில் முனைவோர் திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள் என பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.. பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் அரசியலில் சிறந்த பங்கேற்பாளர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்..

பாஜகவினர்
பாஜகவில் இருந்து யாரேனும் விலகிச் சென்றால் அது தற்போது மிகப் பெரிய விவாதமாகி வருகிறது.. கடந்த 2 வாரங்களில் 420 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளனர்.. சாதாரண தொண்டன் கூட இந்த கட்சியில் இருந்து போகக்கூடாது என்றே நினைக்கிறோம்.. சில நேரங்களில் அவர்களது தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாகவும், அவர்களது தனிப்பட்ட கொள்கைகள் காரணமாகவும் செல்லும்போது எதுவும் செய்ய முடியாமல் போகிறது.. தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம்..குறிப்பாக இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கின்ற மாநிலம் எனக் கூறுகிறோம்.. உயர் கல்வி என்று கூறும்போது, 12ஆம் வகுப்பைத் தாண்டி அவர்கள் செல்வதுதான்.. ஆனால் பரீட்சையில் இத்தனை பேர் தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள் என்று கூறினால், அரசாங்கம் இதனை மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும்..

அரசு பள்ளி
தமிழ்நாட்டின் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்து கொண்டாலும் கூட, அரசுப் பள்ளிகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது..ஆனால் அரசுப் பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுகிறது.. இலவசமாக புத்தகங்கள், மதிய உணவு, மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை வழங்கப்படுகிறது.. இவற்றையெல்லாம் தாண்டியும் கூட அரசுப் பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேர்வதில்லை?

நட்பு நட்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நண்பர் சினிமாவில் நடிக்கலாம்..அமைச்சராகவும் இருக்கலாம்.. அவருடன் நேரம் செலவிடுவதையோ, நட்பையோ எதுவும் சொல்லவில்லை.. அதேநேரத்தில் கல்வி அமைச்சர் இதையும் கவனிக்க வேண்டும்.. கொரோனாவுக்கு பிறகு மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்..

நீட் ரகசியம்
நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது என்பது, இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள்? என கேட்கத் தோன்றுகிறது.. திமுக தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.. எத்தனை இளம் பெண்கள், குழந்தைகளின் உயிரை திமுக காவு வாங்கியிருக்கிறது.. இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி சொல்லும் வாக்குறுதிக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக எப்படி மாற முடியும்..

சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கை ஐடி விங் குலைத்து விடும் என்று கூறினால், மாநிலத்தின் முதலமைச்சருக்கு அவர்களுடைய காவல் துறை மீது நம்பிக்கை இழந்துள்ளாரா?என்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கின்ற தலைவர்கள், அமைச்சர்கள் அவர்களே வந்து சட்டம் ஒழுங்கு குலைவதற்கு காரணமாக இருக்கின்றனர் என்ற கருத்துக்களை சொல்கிறார்களோ, தன்னுடைய சொந்த அமைச்சர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினால், எதற்காக எதிர்கட்சிகள் மீது பாய வேண்டும்?

முதல்வர் பேச்சு
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு மிக முக்கியமான காரணம், திமுகவில் இருக்கின்ற முக்கியமான அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் பேசிய பேச்சுக்கள்தான்..கோவையில் கூட இரு நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.. அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்.. அது நியாயமானதுதான்.. ஆனால் இது போன்ற பிரச்னைகள் வருவதற்கு என்ன காரணம்? கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இது ஏன் இப்போது நடக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்..சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்றால், முதலில் முதலமைச்சர் அவருடைய பேச்சில் கவனம் வைக்க வேண்டும்.. மேலும் அமைச்சரவை சகாக்கள் என்ன பேசுகிறார்கள்? அதன் விளைவு எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.. அதை விட்டு ஐடி விங்கை ஏன் குறை கூற வேண்டும்? ஐடி விங் நினைத்தால் அரசாங்கத்தை தூக்கிப் போட முடியுமா?

வானதி சீனிவாசன்
அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் ஏற்பட்டது.. கூட்டணியில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது.. கடந்த வாரம் ஜேபி நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது, தங்கள் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து, இதுபோன்று விரும்பத் தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்..எனவே வருகின்ற காலத்தில் இவை அனைத்தும் சரியாகிவிடும் என நம்புகிறோம்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications