நேர்ல வந்து கேட்டு பாருங்க! "வானதியும் இங்கே.. வளர்ச்சியும் இங்கே" மநீமவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, "வானதி இங்கே.. வாக்குறுதி எங்கே" என ட்ரெண்ட் செய்த நிலையில், "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே" என பதிலடி கொடுத்து வருகிறார் வானதி சீனிவாசன்.
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை குறிவைத்து களமிறங்கியுள்ளது மக்கள் நீதி மய்யம்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வானதி சீனிவாசன் நிறைவேற்றவில்லை எனக் கூறி, இன்று உக்கடம் பகுதியில் மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேலு, மநீம மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 'வானதிக்கு லாபம்.. மக்களுக்கு நாமம்' என்றும், 'வானதி இங்கே வாக்குறுதி எங்கே' என்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு, மக்கள் நீதி மய்யத்தினர் பதாகைகளை ஏந்தி இருந்தனர். வானதி இங்கே வாக்குறுதி எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே" என்ற தலைப்பில், கோவை தெற்கு தொகுதிக்கான மேம்பாட்டு பணிகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை மென்ஷன் செய்து, "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே", "கோவை தெற்கு வளர்கிறது", "வானதி இங்கே.. கமல் எங்கே" ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டு வருகிறார் வானதி சீனிவாசன்.

மேலும், "கோவை தெற்கு தொகுதியில் 0-2 வதுவரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று.
அமுதம் என்னும் மக்கள் நல திட்டத்தினை கடந்த மே 2022ல் துவங்கி அதன் மூலம் இன்று வரை சுமார் 1500கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அதாவது 6 மாதம் வரை தாய்க்கும் அதன் பிறகு குழந்தைக்கும் தினமும் 250 மிலி சுத்தமான பசும்பாலை அவர்களது வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் தனது தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான தரவுகளை காணவேண்டுமென்றால் எல்.எல்.ஏ அலுவலகத்திற்கு வாருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.












Click it and Unblock the Notifications