கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார் செந்தில் பாலாஜி! முட்டாள் மாதிரி தெரியுதா! வரிந்து கட்டும் வானதி!
கோவை: மாநகராட்சித் தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு கொலுசை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஒரு குப்பையை அள்ளச் சொல்வதற்கு கூட எம்.எல்.ஏ. 4 முறை பேச வேண்டியுள்ளதாகவும் அந்தளவுக்கு நிர்வாகம் மோசமாக உள்ளதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
கோவை மக்களை முட்டாள்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நினைத்துக் கொண்டாரா என கேள்வி எழுப்பிய அவர், விரைவில் அவருக்கும் பாடம் புகட்டுவார்கள் என வானதி தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி பற்றி பேசிய வானதி.. காயத்ரியை நினைவூட்டிய செய்தியாளர்! என்ன சொன்னார் தெரியுமா?

பாஜக எம்.எல்.ஏ.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் ஏடிஎம் மெஷின்களை மக்கள் பயன்பட்டுக்கு திறந்து வைத்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அமைச்சர் செந்தில்பாலாஜியை வறுத்தெடுத்து விட்டார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள கரூர்காரர் தேர்தலின் போது மக்களுக்கு கொலுசு கொடுத்து ஏமாற்றியவர் என செந்தில்பாலாஜி மீது அட்டாக் செய்தார். கோவை மாநகராட்சியை கண்டித்து பாஜக சார்பில் தனியாக ஒரு போராட்டம் நடத்துவது பற்றி ஒரு மாதமாக டிஸ்கஷன் நடத்தி வருவதாக கூறினார்.

பாடம் புகட்ட தயார்
இதனிடையே மறந்தும் கூட பாஜக போராட்டம் நடத்தும் என அவர் கூறவில்லை. இதற்கு காரணம் ஏற்கனவே கோவையில் பாஜக நிர்வாகிகள் பந்த் அறிவித்து அதனை அண்ணாமலை மறுத்ததால், இந்த முறை போராட்டம் குறித்த விவகாரத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக மட்டும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு குப்பையை அள்ளச் சொல்வதற்கு கூட எம்.எல்.ஏ. 4 முறை பேச வேண்டியுள்ளதாக வேதனையை பகிர்ந்த அவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள் எனக் கூறினார்.

கோவைக்கு துரோகம்
சாலை விவகாரத்தில் கோவை மக்களுக்கு தமிழக அரசு மிகப் பெரிய துரோகம் செய்து வருவதாகவும் கோவையிலிருந்து அதிகமான வரியை பெறும் அரசு, ஒரு சாலை போடக்கூட யோசனை செய்வதாகவும் வானதி சீனிவாசன் சாடினார். கோவையின் அடிப்படை கட்டமைப்பு மிக மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் இது தான் இன்றைய கோவையின் நிலை எனவும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

உறுதிமொழிகள்
இதனிடையே கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக வானதி பெருமிதம் தெரிவித்தார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கார்டு மூலம் நாளொன்றுக்கு 20 லிட்டர் வரை கொடுப்பேன் எனக் கூறியதை இப்போது நிறைவேற்றியுள்ளதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்து வருவதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் மொபல் அலுவலகம் அமைத்து மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகள், கோரிக்கைகளை தீர்த்து வைத்து வருவதாக தெரிவித்தார்.