உடற்கூராய்வு வளாகத்தை சுற்றி ரத்தம்.. கோவை அரசு மருத்துவமனையில் திக் திக். என்ன நடந்தது?
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு வளாகத்துக்கு முன்பு ரத்தம் கலந்த சிவப்பு நிற திரவம் வெளியேறியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த மக்கள், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட மக்களும் சிகிச்சை பெறுகின்றனர். மேற்கு மண்டலத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாக இது இயங்கி வருகிறது.

சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த வழக்கு சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது சுகாதார சீர்கேடு புகாரில் சிக்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், உடற்கூராய்வு மையம் உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த வளாகத்துக்கு முன்பு, ரத்தம் கலந்த தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. அது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி. அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, "கோவை அரசு மருத்துவமனை உடற்கூராய்வு கூடத்தில், சராசரியாக தினசரி சுமார் 20 உடல்களுக்கு கூராய்வு செய்யப்படுகின்றன. தினசரி மாலை பணி முடிந்து, மேடைகளை கழுவி விடும்போது வரும் நீர்." என்று கூறினர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆனாலும், ப்ளீச்சிங் பவுடரின் வெள்ளை நிறம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறும் அளவுக்கு கழிவுநீர் வெளியேறியது. இந்த ஒரு இடத்தில் மட்டுமல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் வேறு சில இடங்களிலும் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேடு பிரச்னை நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா வெளியிட்டுள்ள விளக்கத்தில், "இந்தப் பிரச்னையை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்படும்." என்று கூறியுள்ளார். விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications