கோவையில் மகன் சேர்த்து வைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டு.. கலங்கிய மூதாட்டி.. கலெக்டர் தந்த உறுதி
கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. 9 ஆண்டுகளை கடந்த பின்னரும் ஒரு சிலர் தற்போதும் அந்த நோட்டுகளை அறியாமையால் வைத்திருக்கிறார்கள்.. அப்படித்தான், கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த தங்கமணி என்ற மூதாட்டி சுமார் 15000 மதிப்புள்ள பழைய 500,1000 நோட்டுகள் வைத்திருக்கிறார். அதை மாற்றித்தருமாறு கோவை கலெக்டரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டது. அதாவது ஒரே நாளில் ₹15.41 லட்சம் கோடி அளவிற்கான நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அப்போது பழையநோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ள கால அவகாசம் அளித்தது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் சென்று மாற்றிகொண்டனர். இதில் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது. அதாவது ₹15.31 லட்சம் கோடி அளவிற்கு திரும்ப வந்துவிட்டது.

திரும்பிய நோட்டுகள்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் 99.3 சதவீதம் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான நோட்டுகளே திரும்ப வரவில்லை.. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், பழைய 500, 1000 நோட்டுகளில் ₹10,787கோடி மதிப்புள்ள நோட்டுகளே அரசுக்கு திரும்பவரவில்லை. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 10 ஆயிரம் கோடி தான் அரசுக்கு திரும்பவில்லை. மற்ற நோட்டுகள் வந்துவிட்டன.
பழைய நோட்டுகள்
இந்த நிலையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளை கடந்த பின்னரும் ஒருசிலர் தற்போதும் அந்த நோட்டுகளை அறியாமையால் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த 75 வயதாகும் தங்கமணி என்ற மூதாட்டி, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பழைய ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தார்.
எனக்கு ஒரே மகன்
இதுகுறித்து மூதாட்டி தங்கமணி செய்தியாளர்களிடம் கூறும் போது, எனது கணவர் கடந்த 1995-ம் ஆண்டு இறந்து விட்டார். எங்களுக்கு ஒரே மகன் தான். எனது மகன் கர்நாடகாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் காலமானார் . தற்போது நான் தனியாக, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் வாழ்ந்து வருகிறேன்.
15000 பழைய நோட்டுகள்
இதற்கிடையே நான் எனது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். அப்போது எனது மகன் வைத்திருந்த ஒரு பையில் பழைய ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை எண்ணி பார்த்தேன். அப்போது 5 எண்ணிக்கையில் ரூ.1,000 நோட்டுகளும், 20 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுகளும் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாய்க்கு பழைய நோட்டுகள் இருந்ததை கண்டேன்.












Click it and Unblock the Notifications